Skip to main content

“அனைவரும் அடித்து உடையுங்கள் என்றார் ஓ.பி.எஸ்.” - சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

ADMK MP CV Shanmugam addressed press

 

அதிமுக அலுவலகத்திலிருந்து ஓ.பி.எஸ். தரப்பினர் ஆவணங்கள் உட்பட பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் புகார் கொடுத்தார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஜெ.சி.டி. பிரபாகர், அதிமுகவிலிருந்து முன்னமே நீக்கப்பட்டு, அதிமுகவுக்கு சம்மந்தமே இல்லாத மூன்றாம் நபரான புகழேந்தி உட்பட ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில், 300 பேர் கொண்ட ரவுடிகள், குண்டர்கள், சமூக விரோதிகள் ஆகியோர் கையில் கத்தி, கடப்பாரை, தடி, கற்களோடு வந்தனர். தனது பிரச்சார வாகனத்தில் வந்த ஓ.பன்னீர்செல்வம், ‘அனைவரும் அடித்து உடையுங்கள்’ என்று சொல்லிக்கொண்டே, அலுவலக சாலையில் இருந்த வாகனங்களை உடைத்து, அங்கிருந்த பொதுமக்களைத் தாக்கினர். மேலும், அங்கு வந்திருந்த அதிமுகவினரை கத்தியால் வெட்டியும், குத்தியும், தடியால் தாக்கியும் அலுவலகம் அருகே வந்தனர். 

 

ADMK MP CV Shanmugam addressed press

 

தலைமை அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடையுங்கள் என ஓ.பி.எஸ். சொல்லி, அதனை உடைத்து அவரின் ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றுள்ளார். இது அனைவருக்கும் தெரியும். 

 

இந்தியாவில் பல்வேறு கட்சியில் இதுவரை உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு, பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. பிறகு ஒன்றிணைந்து இருக்கிறாகள். அல்லது தனிகட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். அதிமுகவில் 1988ல் ஏற்பட்ட ஜெயலலிதா, ஜானகி பிளவின்போது அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. யாரும் இந்த அளவுக்கு தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழையவில்லை. அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், இன்று அதிமுகவில் பெரும்பான்மையையும், தொண்டர்களிடத்தில் நன்மதிப்பையும் இழந்த ஓ.பி.எஸ். அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று சீல் வைக்க காரணமாக இருந்துள்ளார். 

 

எந்த வாகனத்தில் ஓ.பி.எஸ். தலைமை அலுவலகத்திற்கு வந்தாரோ அதே வாகனத்தில், அலுவலகத்தினுள்ளே இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் தலைமை அலுவலக ஆவணங்களை எடுத்துசென்றார். இதுவும் அனைவருக்கும் தெரியும். 

 

11ம் தேதி இரவே எங்கள் மா.செ. ஆதிராஜராம், தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். ஆனால், இன்று வரை காவல்துறை அந்தப் புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னதாக 8ம் தேதி எங்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சமூக விரோதிகளால் தலைமை அலுவலகத்திற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று புகார் கொடுத்தார். ஆனால், காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை. 

 

11ம் தேதி காவல்துறையின் பாதுகாப்போடு அந்த சம்பவங்கள் நடைபெற்றது. 32 ஆண்டு தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக தலைமை அலுவலகம் திமுக அரசால் சீல் வைக்கப்பட்டது. இந்தியாவிலே இதுவரையில் எந்தக் கட்சியிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக சரித்திரமே இல்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.