Skip to main content

அமைச்சருக்கு 'கல்தா' கொடுக்கும் வக்கீல்! - கலக்கத்தில் அதிமுகவினர்!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

ADMK member petitioned viralimalai


ஜெ. பிறந்த நாளான 24ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதனால், 24ஆம் தேதி காலை முதல் அதிமுக சென்னை தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்பமனுவை பெற்று தாக்கல் செய்துவருகின்றனர். மனுக்களைப் பெற்றதும் எம்.ஜி.ஆர், ஜெ. சிலைகளிடம் வைத்து ஆசி பெற்று மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அதில் ஒரு மனு, அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதிக்கு, ஆலங்குடித் தொகுதியைச் சேர்ந்தவர் கேட்டிருப்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர் தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் நெவளிநாதன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவராக இருந்தவர். தற்போது, புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவராக இருக்கிறார். இன்று, ஆலங்குடி தொகுதிக்கு விருப்பமனு படிவத்தை வாங்கியவர் தொடர்ந்து அமைச்சரின் தொகுதியான விராலிமலைக்கும் விருப்பமனு வாங்கியதோடு அதை முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி புதுக்கோட்டை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

அமைச்சர் விஜயபாஸ்கர், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்ப மனுத் தாக்கல் செய்து வரும் நிலையில், நெவளிநாதன் அமைச்சரின் விராலிமலைத் தொகுதிக்கு விருப்ப மனு பெற்றிருப்பது அமைச்சரின் ஆதரவாளர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. இவர்களின் கோபத்திற்கு காரணம், விராலிமலை தொகுதியைப் பொருத்தவரை பல ஆயிரம் கோடிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் நடக்க காரணமாக இருப்பவர் அமைச்சர். தற்போதுகூட காவிரி-தெற்கு, வெள்ளாறு, வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சரை அழைத்துவந்து பிரமாண்டமாக தொடக்கவிழாவும் நடத்தினார். அதேபோல் தன் பெயரில் உள்ள சி.வி.பி. பேரவையின சார்பில் சொந்தச் செலவில் சில கோடிகளில், சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு ‘விஜயபாஸ்கர் வீட்டுப் பொங்கல் சீர்’ என வழங்கினார். மேலும் விளையாட்டு உபகரணங்கள், தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் எனத் தொகுதி முழுக்க அரசுப் பணமின்றி தன் சொந்தச் செலவில் வழங்கினார். மேலும் சமீபத்தில் தொகுதி முழுக்க கோலப்போட்டிகளை நடத்தினார். இப்படி தன் தேர்தல் பணியைப் பல மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்ட அமைச்சர், இந்த முறை தன்னை எதிர்த்து யாரும் சீட் கேட்க மாட்டார்கள் என நினைத்திருந்தார். ஆரம்ப நாளிலேயே அவரின் தொகுதிக்கு, அடுத்த தொகுதியைச் சார்ந்த ஒருவர் பணம் கட்டியது அமைச்சரின் ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்றாக அமைந்து விட்டது. 

 

இது குறித்து விராலிமலை தொகுதிக்கு விருப்பமனு பெற்றுள்ள வழக்கறிஞர் நெவளிநாதன், “நான் யாருக்கு எதிராகவும் பணம் கட்டவில்லை. அந்த தொகுதியில் நிற்க விரும்பித்தான் விருப்பமனுவை வாங்கியுள்ளேன். நான் வசிக்கும் ஆலங்குடிக்கும் வாங்கியுள்ளேன். கட்சித் தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு கொடுத்தாலும் நிச்சயம் வெற்றிபெறுவேன். நான் விராலிமலையை விரும்புவதற்கு காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு அரசின் வளர்ச்சிப் பணிகள் இங்கு நடந்துள்ளது. இந்தத் தொகுதி ஏற்படுத்தப்பட்டதில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தான் கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றாலும் தேர்தலில் சமூகம் சார்ந்த ஓட்டுகளும் முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்தத் தொகுதியில் நான் சார்ந்த முத்திரையர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மக்களிடம் தங்களுக்கான அரசியல் அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்கின்ற ஒரு ஏக்கம் இருக்கிறது. மேலும், ஏறத்தாழ 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தில் ஏற்கனவே 3 தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ஒருவருக்கே 4வது முறையாக வாய்ப்பு கொடுப்பதைவிட புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்க கட்சித் தலைமை முடிவுசெய்து அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினால் அமைச்சரின் ஆதரவோடும், அந்த தொகுதியில் இருக்கும் கழக நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் வெற்றிபெற்று வெற்றிக்கனியை தலைமையிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். மேலும், “விருப்ப மனுவை விராலிமலை முருகன் கோயிலில் வைத்துத் தரிசனம் செய்தபிறகு, மார்ச் 3ஆம் தேதி தாக்கல் செய்யப் போகிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.