Skip to main content

"தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது" - ஜெயக்குமார் 

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

admk jayakumar talks about erode east by election admk alliance 

 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையர்  சந்திப்புக்கு பின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயக விரோத செயல்கள், அத்துமீறல்கள், அநியாயங்களை ஆளும்  திமுக அரசு அரங்கேற்றுவதால் அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச் சாவடிகள் உள்ளன. 238 வாக்குச் சாவடிகளிலும் அதிமுகவின் பொறுப்பாளர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது அங்கு சுமார்  30,000 முதல் 40,000 வரை உரிய வாக்காளர்கள் இல்லாமல் வாக்காளர் பெயர் பட்டியல் மட்டுமே உள்ளன. இதனை கொண்டு திமுகவினர் வாக்காளர் அட்டையை தயாரித்து போலியாக வாக்கு செலுத்த உள்ளனர். எனவே தேர்தல் ஆணையம் உரிய ஆய்வு செய்து  கணக்கெடுப்பு  நடத்தி உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளோம்.

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் 237வது வாக்குச் சாவடி ரயில்வே காலனியில் உள்ள 180 வாக்காளர்கள் வேறு இடங்களுக்கு  சென்று விட்டனர்.  எனவே அதனை சரி செய்ய வேண்டும். இடம்பெயர்ந்து சென்றவர்கள் வேறு ஒரு இடத்தில் வாக்காளர்களாக பதிவு செய்து இருப்பார்கள். இதனால்  வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு ஏற்பட்டு விடும். இல்லையெனில் அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றோம். பண பட்டுவாடா போன்ற முறைகேடுகளை களைந்து ஜனநாயகத்தை  காக்க வேண்டும் என்றோம். தேர்தல் ஆணையரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

 

நாங்கள் தான் அதிமுக. இரட்டை இலை சின்னம் முடக்க முடியாது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது பற்றி கருத்து சொல்வது ஏற்புடையது ஆகாது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போட்டி இடுவது என்பது அவரை சார்ந்து இருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். அது ஒரு மண் குதிரை என்று. மண் குதிரை கரை சேராது. கூட்டணி தொடர்பான பெயரில் முற்போக்கு என்ற வார்த்தை அச்சுப் பிழை தான். அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி தர்மம் என்று ஒன்று உள்ளது. அதன்படிதான் நாங்கள் செயல்படுகிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் தலைமை. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. 2019 ல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தபோது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றார். அதில் பாஜகவும் தானே இருந்தது. இன்றைக்கும் இந்த கூட்டணி தொடர்கிறது. பாஜக ஒரு தேசியக் கட்சி. உரிய நேரத்தில் அவர்களின் முடிவை அறிவிப்பார்கள்.  உடனே முடிவை தெரிவிக்க வலியுறுத்த முடியாது. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தலை பொறுத்தவரை  முன்வைத்த காலை பின் வைக்க போவதில்லை.

 

கடலில் பேனா சின்னம் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீனவர்களால் வலை விரிக்க முடியாது; படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாது.மேலும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும்.  அரசு பணத்தை விரயம் செய்யாதீர்கள்.  இந்தியாவில் உள்ள கட்சிகளில் அதிக நிதி உள்ள கட்சி திமுக. அறிவாலயத்தில் சின்னத்தை வைத்துக்கொள்ளட்டும்.  80 கோடி ரூபாயை செலவு செய்து எழுதாத பேனா வைப்பது அவசியமா? இது தொடர்பாக நடைபெற்ற கூட்டம் என்பது கருத்து கேட்புக் கூட்டமாக இல்லாமல் திமுகவின் பொதுக் கூட்டமாக மாறிவிட்டது. முழுக்க முழுக்க  சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் நடைபெற்ற கூட்டம். பேனா சின்னத்தை அறிவாலயத்தில் அமைத்தால் ஓகே. ஆனால் கடலில் வைத்தால் கடுமையாக எதிர்ப்போம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.