Skip to main content

"எடப்பாடி பழனிசாமிக்கு திமுக விளக்கமளிக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

admk jayakumar talks about edappadi palanisamy son america trip related

 

"ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாகக் கூறி, தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்போது மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார்.

 

அதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்பி வருகிறார். அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியவர் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டு ஆட்சியில் ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்துக்கு சொந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர்களின் மேல் உள்ள சொத்துக்குவிப்பு வழக்குகளை திசை திருப்புவதற்குத் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புகிறார். 

 

‘முதலீடு’ என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிசாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப்போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது. 2015-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘அதிமுக மாநாடு!’. எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு!.

 

போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எனக் "கணக்கு" காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும், அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதனை தொழில்துறை அமைச்சராக இருந்த நான் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு! அதிமுகவின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்தி "சுற்றுலா" சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா?

 

ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிகைக் குறிப்பு வாயிலாகவும் விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும் இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள், போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார். 

 

ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் முதலமைச்சரைப் பார்த்து தரக்குறைவாக அவதூறாக கீழ்தரமாகப் பேசி அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

admk jayakumar talks about edappadi palanisamy son america trip related

 

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமி கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இன்று வரை பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் தொடங்கி வருகின்றன என்றும், திமுக அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் இந்த ஆட்சியில் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.  இதற்கு புள்ளிவிவரங்கள் மூலம் பதில் அளிக்க முடியாத நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி மகன் அமெரிக்கா சென்றார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகிக்கும் போதோ, அதற்கு முன்போ அல்லது இன்று வரையிலோ எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அமெரிக்கா சென்றதில்லை. எடப்பாடி பழனிசாமி மகன் அமெரிக்கா சென்றார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ அல்லது அமைச்சர் தங்கம் தென்னரசோ நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி மக்கள் எழுப்பிய கேள்விகளையும் சந்தேகங்களையும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு திமுக எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு நேரடியாக விளக்கத்தை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'மிக்ஜாம்' புயல்; அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

'Miqjam' Storm; Principal inspection at State Emergency Operations Center

 

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு இன்று (03.12.2023) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர்களைக் காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

 

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளேன். அந்த அடிப்படையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4967 இதர நிவாரண மையங்களில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் 225 வீரர்களைக் கொண்ட ஒன்பது குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. புயலின் போது மரங்கள், மின் கம்பங்கள், மின் கம்பிகள் கீழே விழும் அபாயம் உள்ளதால் மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

 

இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  எனப் பலரும் உடனிருந்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

4 மாநில தேர்தல் முடிவுகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

4 state election results  Chief Minister M. K. Stalin's greetings
கோப்புப்படம்

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் 4 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு காலமாக, வெற்றி பெற்றவர்களின் ஆட்சிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்