Skip to main content

எடப்பாடி பழனிசாமி வரவேற்பில் அதிமுக கோஷ்டி மோதல்! - சாத்தூரில் கைகலப்பு!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

ADMK edappadi palanisamy visits edappadi.. admk members fought

 

விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரங்குடியில், விருதுநகர் அதிமுக மேற்கு மா.செ. ராஜேந்திரபாலாஜி அளித்த தடபுடல் வரவேற்பை ஏற்றுக்கொண்டார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. அவர், சாத்தூரைக் கடந்தபிறகு அங்கே நிர்வாகிகளுக்கிடையே கைகலப்பாகி, சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருக்கிறது.  

 

என்ன நடந்தது?

 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் மோதல் வலுத்த நிலையில், ரவிச்சந்திரன் விருதுநகர் கிழக்கு மா.செ. ஆக்கப்பட்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, ராஜேந்திரபாலாஜியும் ராஜவர்மனும் ஒன்றுசேர, ராஜவர்மனுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்துவரும் சாத்தூர் ஒ.செ. சண்முகக்கனி ரவிச்சந்திரனின் ஆதரவாளராகி, உள்ளூரில் ராஜேந்திரபாலாஜி மற்றும் ராஜவர்மனுக்கு எதிராக அரசியல் செய்துவருகிறார்.

 

எடப்பாடி பழனிசாமி, ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஒரே காரில் சாத்தூர் அருகிலுள்ள வெங்கடாசலபுரத்தில் நான்கு வழிச்சாலையைக் கடந்தபோது,  விருதுநகர் கிழக்கு மா.செ. ரவிச்சந்திரன் சார்பில் அதிமுகவினர் வரவேற்பளித்தனர். அப்போது, ராஜேந்திரபாலாஜியை சந்தித்து உதவி பெறுவதை வழக்கமாகக் கொண்ட, சாத்தூர் – ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டரான வீராரெட்டி, சத்தமாக ஏதோ பேசிவிட, பின்னால் வந்த வாகனங்களில் இருந்து இறங்கியவர்கள் ஆவேசமாகத் தாக்கினார்கள். நடந்த அடிதடியை விலக்கிவிட்ட காவல்துறை, ‘போகட்டும்.. போகட்டும்..’ என்று வாகனங்கள் அனைத்தையும் அங்கிருந்து கிளப்பிவிட்டது.

 

இந்தக் களேபரம் நடந்தபோது, ராஜவர்மனிடம் சாத்தூர் அதிமுக நகரச் செயலாளர் இளங்கோ, ‘என்னண்ணே வந்த இடத்துல இப்படி?’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அவரிடம் பேசிவிட்டு ராஜவர்மன் கார் கிளம்பிய நிலையில், இதைப் பார்த்து டென்ஷனான ஒ.செ. சண்முகக்கனி, தகாத வார்த்தையில் இளங்கோவை திட்டியதோடு, அடிக்கவும் செய்தார். இளங்கோவும் பதிலுக்குத் தாக்க, அப்போது சண்முகக்கனி தரப்பு ஆட்கள் நிறையபேர் சூழ்ந்துவிட்டனர். 

 

உள்ளூரில் அதிமுக ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனியிடம் அடிவாங்கிய வேதனையோடு, சாத்தூர் டவுன் காவல் நிலையம் சென்ற அதிமுக நகரச் செயலாளர் இளங்கோ அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவாகியிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்