Skip to main content

ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டவருக்கு பதவியா? ர.ர.க்கள் அதிர்ச்சி!!!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
eps

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தை கட்சி நிர்வாக ரீதியாக வடக்கு, தெற்கு என பிரித்து வைத்து நிர்வாகிகளை நியமித்து கட்சி பணி பணிகளை செய்து வருகிறது அதிமுக. வடக்கு மாவட்ட செயலாளராக மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு செயலாற்றி வந்தனர்.

 

தெற்கு மாவட்டம் செயலாளராக வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன் நியமிப்பதற்கு கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது ஆரணி தொகுதியை தெற்கு மாவட்டத்தோடும், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியை வடக்கு மாவட்டத்தோடு இணைத்து இது நிர்வாக ரீதியாக சரியாக இருக்கும் என காரணம் கூறி விவகாரத்தை முடித்து வைத்தனர். கடந்த இரண்டு வருடமாக இவர்கள் இதே நிலையில் பணியாற்றி வந்தனர். 

 

இந்நிலையில் அதிமுகவில் மிகப்பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றமும், மாவட்டங்கள் பிரிப்பும் நடைபெற்றுள்ளது. இந்த அடிப்படையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக பால் கூட்டுறவு சங்க மாவட்ட சேர்மன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் இது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வடக்கு மாவட்டத்திற்கு 4 சட்டமன்ற தொகுதிகளும், தெற்கு மாவட்டத்திற்கு 4 சட்டமன்ற தொகுதிகள் தருவதுபோல் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர் ஆகிய 4 தொகுதிகளும் வடக்கு மாவட்டத்தில் செய்யார், வந்தவாசி, ஆரணி, கலசப்பாக்கம் என நான்கு தொகுதிகளை பிரித்து வைத்துள்ளனர். இதில், தெற்கு மாவட்டத்தில் கலசபாக்கம் தொகுதி வந்திருக்கவேண்டும் ஆனால் அதற்கு பதில் போளூரை இதோடு இணைத்து வைத்துள்ளனர்.

 

இதுபற்றி அதிமுக பிரமுகர் ஒருவர் நம்மிடம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் திமுகவும், மூன்று தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. செய்யார் மோகன், ஆரணி சேவூர் ராமச்சந்திரன், கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றனர். இதில், கலசபாக்கம் தொகுதி என்பது தற்போது மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ச்சியாக நின்று வெற்றி பெறும் தொகுதி. அந்த தொகுதியில் அவருடைய சமூகத்தினர், உறவினர்கள் என அதிகமாக உள்ளனர். அவர் அந்த தொகுதியில் அதுமட்டுமல்லாமல், கலசபாக்கம் ஒன்றிய சேர்மனாகவும் இருந்துள்ளார். கலசப்பாக்கத்தில்தான் அவருக்கு ஆதரவாளர்களும் அதிகம். ஆனால் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, அமைச்சரின் லஞ்ச டார்ச்சரால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அமைச்சர் பதவியை இழந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார். அப்படிப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் தேர்தலில் சீட் வழங்கக்கூடாது என கலசப்பாக்கம் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக, பன்னீர்செல்வத்திற்கு சீட் வழங்கினார், அவரும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். அவர் எம்.எல்.ஏ. ஆனது அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் இரு தரப்பும் கலசபாக்கம் தொகுதிக்குள் எதிரும் புதிருமாகவே மோதிக்கொண்டுள்ளன. 

 

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு முதல்வரான எடப்பாடி பழனிசாமி மூலம் மீண்டும் வந்தார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. கொங்கு அமைச்சர்களின் நட்பினால் அக்ரிக்கு முக்கியத்துவம் கிடைத்தன. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் கட்சியில் வாய்ப்பு வழங்கினால், நான் அதிரடியாக வேறு முடிவுகளை எடுப்பேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கலசபாக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ள பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிரட்டினார். பின்னர் சில பல பேச்சுவார்த்தைகளும் சில சமாதான படங்களும் நடந்து, கவனிப்புகள் செய்தபின்பு பன்னீர்செல்வம் தன்னுடைய எதிர்ப்பின் அளவை குறைத்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் கட்சிக்குள் தன்னுடைய அதிகாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக படிப்படியாக தன்னுடைய நண்பர்களான, அமைச்சர்களாக உள்ளவர்களையும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் போன்றோருடனும் லாபி செய்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே திருவண்ணாமலை வேலூர் பால் கூட்டுறவு ஒன்றியத்தை இரண்டாக பிரித்து திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் என்று ஒன்றை உருவாக்கி அதன் சேர்மன் பதவியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்கார வைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவதை அறிந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது மேல்மட்ட லாபி மூலம் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என காய் நகர்த்தினார். அவர் எதிர்பார்த்தபடியே தெற்கு மாவட்ட செயலாளர் பதவி அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதனை கலசபாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் மீண்டும் சில சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தெற்கு மாவட்டத்தில் இருக்க வேண்டிய கலசபாக்கத்தை வடக்கு மாவட்டத்திற்கும், வடக்கு மாவட்டத்தில் இருக்க வேண்டிய போளுரை தெற்கு மாவட்டத்திலும் இணைத்து பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்துவிட்டு அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

 

இந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சிக்குள் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என ஓரம் கட்டி வைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் பதவியை வழங்கி இருப்பது எங்களை போன்ற நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என புலம்புகின்றனர் நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.