Skip to main content

அந்த ரவிச்சந்திரன் இல்லை; இந்த ரவிச்சந்திரன்! - மா.செ. நியமனத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்த மாயம்!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

Admk district secretary appointment rajendrabalaji


‘நான் மாவட்ட செயலாளர் ஆயிட்டேன்..’ என்று  (விருதுநகர் மாவட்டம் – நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்) E.ரவிச்சந்திரனும் அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய சிறிது நேரத்திலேயே,  ‘தப்பு பண்ணிட்டோம்.. தப்பு பண்ணிட்டோம்.  விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரா கட்சித் தலைமை அறிவித்திருப்பது  K.ரவிச்சந்திரன் (வெம்பக்கோட்டை ஒன்றிய கழக முன்னாள் செயலாளர்)’ எனத் திருத்தப்பட்ட அறிக்கை வெளிவர,  குதூகலத்தில் இருந்தவர்கள்  நொந்து ‘நூடுல்ஸ்’ ஆனார்கள்.  

 

‘மாவட்டங்களைப் பிரித்து, அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்களின் நியமன அறிவிப்பை வெளியிடுவதில் இத்தனை குளறுபடிகள் ஏன்?’ என்ற கேள்விக்கு,   “கட்சித் தலைமை எடுக்கின்ற திடீர் முடிவுகளால்,   ஆரம்பத்திலிருந்தே விருதுநகர் மாவட்ட தொண்டர்கள், தொடர்ந்து குழப்பத்திலேயே உள்ளனர்.’ என்கிறார்கள் அக்கட்சியினர். 


விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி,  2011-ல் மாவட்ட கழகச் செயலாளர் ஆனார். தொடர்ந்து அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்து வருகிறார். ஆனாலும், கடந்த மார்ச் 22-ஆம் தேதி, மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். நான்கே மாதங்களில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி, அவரையே விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமித்தது கட்சித் தலைமை. ‘திண்ணை எப்போது காலியாகும்’ என்று காத்திருந்ததுபோல், அந்த நான்கு மாதங்களில், ‘அடுத்த மாவட்ட செயலாளர் நானே!’ என்று, கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஆளாளுக்கு மார் தட்டினார்கள்.  ‘கொலை மிரட்டல் விடுத்தார்’ என சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், பகிரங்கமாகவே ராஜேந்திரபாலாஜி மீது குற்றம் சுமத்தினார்.  


இந்த நிலையில், 12-ஆம் தேதி இரவு, மாவட்டங்களைப் பிரித்து மாவட்ட கழகச் செயலாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது கட்சித் தலைமை. அதில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு, மீண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியையும், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் கிழக்கு மாவட்டத்துக்கு, நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் E.ரவிச்சந்திரனையும், மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்து அறிவித்தது. 

 

Admk district secretary appointment rajendrabalaji


நரிக்குடி ஒ.செ. (அம்மன்பட்டி) E.ரவிச்சந்திரன், ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் ஆவார். வெளிப்படையாக அமைச்சரோடு மோதியபடியே இருந்த ராஜவர்மனுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், E.ரவிச்சந்திரனையும் ஒரு பகுதியின் மாவட்ட செயலாளர் ஆக்கியிருக்கிறது தலைமை என்று அந்தத் தரப்பு மகிழ்ச்சியில் திளைத்த வேளையில்தான், ‘அது வேறு ரவிச்சந்திரன்’ என்று திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகி, அவர்களை நிலைகுலைய வைத்தது. காரணம் – முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியான K.ரவிச்சந்திரன், ராஜேந்திரபாலாஜியின் தீவிர விசுவாசியாக இருப்பதுதான்.  இதன்மூலம், ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டமும், மீண்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வசமாகிவிட்டது. 

 

Admk district secretary appointment rajendrabalaji


‘2011-ல் சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியலே, அன்றைய தலைமை ஜெயலலிதாவின் அனுமதியின்றி வெளியிடப்பட்டு, பிறகு முற்றிலுமாக மாற்றப்பட்ட வரலாறெல்லாம் அதிமுகவுக்கு உண்டு. தற்போது மா.செ. நியமனத்தில் குளறுபடி என்பதெல்லாம் ஜுஜுபி.’ என, அக்கட்சியின் தொண்டர்களே ‘கமெண்ட்’ அடிக்க,  ‘12-ஆம் தேதி இரவு என்ன நடந்தது?’ என,   அதிமுக தலைமைக் கழக வட்டாரத்தில் விசாரித்தோம்.
 


“எந்தத் தப்பும் நடந்துவிடவில்லை. ராஜவர்மன் ஆதரவாளர் E.ரவிச்சந்திரனைத்தான் முதலில் தலைமை அறிவித்தது. ராஜேந்திரபாலாஜியோடு பிரச்சனை எதுவும் பண்ணக்கூடாது என்று E.ரவிச்சந்திரனுக்கு அறிவுரை வேறு வழங்கியது. அவரும், பகையை மறந்து, ராஜேந்திரபாலாஜியிடம் ஆசி பெறுவதற்காக அமைச்சரின் லைனில் வந்தார். அப்போது, முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டார். சுதாரித்த அமைச்சர் அந்த இரவு வேளையிலேயே தலைமையைத் தொடர்புகொண்டு ‘மாவட்டத்தில் ஒரு பகுதியின் மாவட்ட செயலாளராக ராஜவர்மன் தரப்பில் ஒருவரை நியமித்தால், இன்னொரு பகுதியின் மாவட்ட செயலாளாராக ஒருக்காலும் நான் இருக்க மாட்டேன்.’ என்று கறார் முகம் காட்டி, தனது எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்தார்.  ‘அமைச்சருக்கு அறவே ஒத்துவராத, எதிர்த்தரப்பினைச் சேர்ந்த ஒருவருக்கு மா.செ. பொறுப்பு வழங்கி, தொடர்ந்து உட்கட்சி பூசலை நாமே வளர்த்துவிடுவது சரியாக இருக்காது.’ என்பதை தலைமையும் உணர்ந்தது.  ராஜேந்திரபாலாஜி செய்த இந்த மாயத்தால், அவரது விருப்பப்படியே K.ரவிச்சந்திரனை,  விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எனத் திருத்தி, சிறிது நேரத்திலேயே அறிவிப்பினை மாற்றி வெளியிட்டது.” என்றனர்.    


பேட்டியிலோ,  ட்வீட்டிலோ, ஏதாவது  ‘அதிரடி’ செய்து, தலைமையிடமும் உரசிக்கொண்டு, நடவடிக்கைக்கு ஆளாகி அவ்வப்போது சறுக்கினாலும், சிலிர்த்தெழுந்துவிடுகிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.