Skip to main content

''ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்; இந்த கதையெல்லாம் வேண்டாம்'' - சி.வி.சண்முகம் பேட்டி

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

admk CV Shanmugam interview

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக தற்பொழுதுதான் வேட்பாளரை உறுதிப்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், டெல்லியில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசுகையில், ''உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழுவை கூட்டுகின்ற அதிகாரம் அவைத்தலைவருக்கு கொடுக்கப்படுகிறது. பொதுக்குழு தேர்ந்தெடுத்த அந்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை அதிமுகவின் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கின்ற உரிமை அவைத்தலைவருக்கு கொடுக்கப்படுகிறது.

 

அவரால் தெரிவிக்கப்படுகின்ற பொதுக்குழுவின் முடிவை தேர்தல் ஆணையம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ முடிவாக எடுத்துக் கொண்டு உடனடியாக ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசுதான் என்பதை கழகத்தின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை நேரில் சந்தித்து கொடுத்திருக்கிறார். தேர்தல் ஆணையம் தீர்ப்பின்படி ஆவணம் செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். 2,501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவரின், “அவைத்தலைவர் நேர்மையாக செயல்படவில்லை. இருந்தாலும், இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வேட்பாளர்களை திரும்பப் பெறுகிறோம் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளதே?” என்ற கேள்விக்கு, ''ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்ற கதை எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கதையெல்லாம் நாங்கள் பேச மாட்டோம்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.