Skip to main content

'பாகங்கள் காணாமல் போகும், பைக்கைத் திரும்ப தருக' - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

complete lockdown police vehicle admk chief o panneerselvam statement

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துவருகின்றனர்.

 

இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (25/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல்துறை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது. 'சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும்; சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சம் என்ற பக்கம்தான் தெரிய வேண்டும்' என்பார் ஜெயலலிதா.

 

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் 08/05/2021ஆம் தேதியிட்ட அரசாணையின்படி 10/05/2021 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அந்தப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வாகனங்களில் சென்று வர இ - பதிவு முறை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இ - பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் அனுமதிப்பதற்கும், இ - பதிவு செய்யாமல், அனுமதியின்றிச் சட்டத்தை மீறி இயக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கும் காவல்துறையினருக்கு முழு உரிமை உண்டு. இதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

 

ஆனால், இ - பதிவு முறையைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றைத் திரும்பத் தரக் கோரி வாகன ஓட்டிகள் இரண்டாவது நாளாக திருவொற்றியூரில் சாலை மறியல் செய்துவருவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. அவர்கள் மறியல் செய்வதற்கான மற்றொரு முக்கியமான காரணம், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதுதான்.

 

அவர்களுடைய கோரிக்கையில் நிச்சயம் நியாயம் உள்ளது. ஏற்கனவே முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள், தங்கள் வாகனங்களில் உள்ள விலை உயர்ந்த உதிரி பாகங்கள் சமூக விரோதிகளால் களவாடப்படுமேயானால், அந்த உதிரிப் பாகங்களைப் புதிதாக வாங்க பல ஆயிரம் ரூபாய்களை மேலும் அவர்கள் செலவழிக்க வேண்டிவரும். இதன்மூலம், அவர்கள் மேலும் கடனாளியாக ஆகக்கூடிய சூழ்நிலை உருவாகும். காவல்துறையினருக்கும் தற்போதுள்ள வேலைப் பளுவில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சேதாரம் ஏதுமில்லாமல் இருக்கின்றனவா என்பதை 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான செயல். 

 

எனவே, வாகன ஓட்டுநர்களின் நியாயமானக் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து, 'சட்டப்படி நடப்பவருக்கு நண்பர்' என்பதை நிலைநாட்டும் வகையில், சட்டத்திற்குட்பட்டு தமிழகத்தில் இ - பதிவு முறையில், அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும், அதன் உரிமைதாரர்களிடம் உடனடியாகத் திருப்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமாய் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்