Skip to main content

“அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி இல்லை” - மீண்டும் உறுதி செய்த ஜெயக்குமார்

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

“A.D.M.K. - BJP No alliance” - Jayakumar confirmed again

 

இந்திய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக் கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

இதனையடுத்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். இவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டெல்லிக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேரும் நேற்று இரவு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்த சூழலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினர். அதேபோல், இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கமுடியும் என பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அண்ணாமலையை மாற்றச் சொல்லும் முடிவில் இ.பி.எஸ். உறுதியாக உள்ளதாகவும் அதிமுக நிர்வாகிகள் ஜெ.பி.நட்டாவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம், அதிமுக வைத்த கருத்தை ஜெ.பி.நட்டா ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சொல்லப்படுகிறது. 

 

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நாளை மாவட்டச் செயலாளர் கூட்டம் கூட இருக்கிறது. அதற்கு முன்னதாக எதையும் சொல்வது உசிதம் அல்ல. நாளை நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், கூட்டணியை பொறுத்தவரை கடந்த 18ம் தேதி, கூட்டணி இல்லை என எடுத்த முடிவு தான்” என்றார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், கூட்டணி இல்லை என்றால் ஏன் அதிமுக நிர்வாகிகள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்திக்க வேண்டும். அந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “சென்றவர்கள் எல்லாம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள். நாட்டு நலனுக்காக பேசியிருக்கலாம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சும் இயக்கம் அதிமுக கிடையது” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்