Skip to main content

ராதிகாவுக்காக சரத்குமார் மேற்கொள்ளும் தீவிர முயற்சி..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

Actress radhika sarathkumar planning contest assembly poll one of the  chennai Constituency

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட இரு பெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஒருபுறம் தயாராகிவரும் நிலையில், அதற்கு அடுத்தப்படியான கட்சிகளும் தமது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. உதாரணத்திற்கு, சமீபத்தில் நடந்த மநீம கட்சியின் பொதுக்குழு, தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் நடந்த ஆலோசனைக் குழு கூட்டங்கள் என தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. 

 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “நாங்கள் தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் முடிவு என்னவென்று தெரியவரும். ஏற்கனவே மண்டல கூட்டம் முடிவில் அதிமுக கூட்டணியில் ஓரிரு தொகுதிகளைக் கொடுத்தால் அக்கூட்டணியில் தொடர மாட்டோம் என அறிவித்திருந்தேன். மேலும் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்திருந்தார். 

 

1996ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் சரத்குமார், 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்று, 2002ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினரானார். அதன்பின் 2006ஆம் ஆண்டு திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி, தனது மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக தேர்தல் பிரச்சாரங்களையும் மேற்கொண்டார். 
 

Actress radhika sarathkumar planning contest assembly poll one of the  chennai Constituency


அதே 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ராதிகா சரத்குமார் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டார் என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அதே ஆண்டு நவம்பர் மாதம் சரத்குமாரும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவராக அக்கட்சியிலிருந்து விலகினார். அதிமுகவிலிருந்து வெளியே வந்த ஒரு வருடத்திற்குள், அதாவது ஆகஸ்ட் 2007ஆம் ஆண்டு ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அதன் பின் தேர்தல்களைக் கூட்டணி வைத்து சந்தித்து வந்தார். இறுதியாக நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார். 

 

இந்நிலையில் ச.ம.க.வின் மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் நடிகை ராதிகா சரத்குமாருக்குக் கட்சியில் கூடுதல் பொறுப்பாக கட்சி முதன்மை துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதேவேளையில் நடிகை ராதிகா சரத்குமார், தமிழகத்தின் பிரபலமான சின்னத்திரை தொடரான ‘சித்தி-2’வில் இருந்து விலகுவதாகவும் சரத்குமாருடன் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், வரும் மார்ச் 3ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடிகை ராதிகா சென்னையின் முக்கிய தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருதுநகர் தொகுதியில் ராதிகாவுடன் பைக் சவாரி! சின்ராசாக மாறிய சரத்குமார்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பிரச்சார அனல் கடுமையாக வீசுகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரச்சார வாகனத்தில் நின்றவாறு மைக் பிடித்து ஆதரவு கேட்கும் வழக்கமான நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்ட வேட்பாளராகத் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்.

ராதிகா செல்லுமிடமெல்லாம் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. சூர்யவம்சம் சின்ராசு என்று பிரச்சாரத்தில் தன் கணவர் சரத்குமாரைப் பெருமிதமாகச் சொல்லிவந்தார். சூர்யவம்சம் சினிமாவில் சின்ராசு, தன்னுடைய காதலியை பைக்கில் அழைத்துச் செல்வார். இந்தத் தேர்தல் களத்தில் நிஜத்திலும்,  தன் மனைவி ராதிகாவை பைக்கிலேயே  பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

திரையுலக நட்சத்திரங்களாக இருந்தும், சாதாரண மனிதர்களைப்போல், பொதுவெளியில் ராதிகாவும் சரத்குமாரும் டூ வீலரில்  செல்வது, விருதுநகர் தொகுதி வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

Next Story

ராதிகாவும் ரசிகையும்..! பாயின்டுக்குப் பாயின்ட் ஷூட்டிங்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Radhika and Rasikai had a conversation during the campaign

விருதுநகர் அருகிலுள்ள பாலவநத்தம் கிராமத்தில்  பொது மக்களிடம் வாக்கு சேகரித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமாரிடம்,  கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் வரும் ஒரு பாடலைப் பாடிக்காட்டினார், மூதாட்டியான பவுனுத்தாய். சினிமா ரசிகையான பவுனுத்தாய், ராதிகா கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறாமல், சினிமா மற்றும்  நடிப்பைப் பற்றியே பேசினார்.

பிரச்சார வாகனத்தில் ராதிகாவைப் பார்த்த பவுனுத்தாய், கிழக்குச் சீமையிலே  திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய  கத்தாழங் காட்டு வழி எனத் துவங்கும் பாடலின் வரியான ‘உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா’ என்று பாடினார். அவர் பாடியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு, தான் பிரச்சாரம் செய்ய வந்ததையே மறந்தவராக,  மைக்கை பவுனுத்தாயிடம் நீட்டி  நேர்காணலே நடத்தினார் ராதிகா.

“ராதிகாவைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை..”என்றார் பவுனுத்தாய். “எதற்காக?” எனக் கேட்டார் ராதிகா. “சினிமாவ ரொம்பவும் பார்ப்பேன். உங்க நடிப்பு எனக்குப் பிடிக்கும்.” எனப் பதிலளித்தார் பவுனுத்தாய். “எந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்?” என ராதிகா கேள்வி கேட்க,“கிழக்குச் சீமையிலே” என பதிலளித்தார் பவுனுத்தாய். வந்த வேலையை மறந்துவிட்டு வாக்காளர் ஒருவரிடம் ஏதேதோ பேசுகிறோமே என்று சுதாரித்த ராதிகா  “நான் உங்ககிட்ட ஓட்டு கேட்க  வந்திருக்கேன். அது பிடிக்கிறதா?” என்று கேட்க, பவுனுத்தாய் “பிடிக்கும்..” என்றார். 

அவரை விட்டுவிட மனமில்லாத ராதிகா “நான் நன்றாகச் செயல்படுவேன் என்று நம்புகிறீர்களா?” என்று கொக்கி போட்டார். “உங்க மனசப் பொருத்தது..”   சாதுர்யமாகப் பேசினார் பவுனுத்தாய். “அப்படி ஒரு எண்ணம், என் முகத்தில்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுதா?” பரிதவிப்புடன் கேட்டார் ராதிகா. ராதிகாவின் கேள்விக்கு  நேரடியாகப்  பதில் கூறாத பவுனுத்தாய், “உழுதபுழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா..” என்று  மீண்டும் பாடினார். “அப்படின்னா? உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல..” எனக் கேட்டார் ராதிகா. அதற்கு பவுனுத்தாய்  “எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனால், ஆட்சிக்கு வர்றவுங்களுக்கு இருக்கணும்.” என்று கூற, இதை எதிர்பார்க்காத ராதிகா சிரித்து மழுப்பினார்.

தொடர்ந்து ராதிகா “உறுதியாக  நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்க, “வருவார்..” என்று சுரத்தில்லாமல் பதிலளித்தார் பவுனுத்தாய். அது தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், அங்கு நின்றவர்களைப்பார்த்து “பாகு உன்னாரா?” என்று கேட்டார் ராதிகா. அதாவது, தெலுங்குமொழியில் நலம் விசாரித்தார். பவுனுத்தாயையும் விட்டுவிட மனமில்லாமல், அவர் பக்கம் திரும்பி “சரத்குமாரைப் பார்க்க வேண்டுமா?”  என்று கேட்டார்.

உடனே பவுனுத்தாய் “சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படம் எனக்கு ரொம்பவும் பிடிச்ச படம்.” என்று முகம் மலர்ந்தார். “அந்தப் படத்துல நானும் நடிச்சிருக்கேன்.” என்று குஷியாகச் சொன்ன ராதிகா  “சரத்குமார் திருமங்கலத்துல பிரச்சாரம் பண்ணுறார்.” என்று கூறிவிட்டு, அடுத்த பாயின்ட்டுக்குக் கிளம்பினார்.

பிரச்சாரம் செய்வதற்கு ஒவ்வொரு வேட்பாளராக, ஒவ்வொரு கட்சியினராக, ஒவ்வொரு பகுதிக்கும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். பலரது உப்புச்சப்பில்லாத பிரச்சார உரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன வாக்காளர்களுக்கு, ராதிகா என்ற சினிமா பிரபலத்தின் முகத்தைப் பார்த்ததும், அவங்களுடன் நேரில் பேசியதும், ஒரு சினிமா ஷூட்டிங்கைப் பார்த்த அனுபவத்தைத் தந்திருக்கும் என்றால் மிகையில்லை என்றனர்,  சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.