Skip to main content

கர்நாடகாவை குறிவைக்கும் ஆம் ஆத்மி; நீதிமன்றத்திற்கு செல்ல மக்களுக்கு அறிவுரை

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

aam aadmi party karnataka assembly election manifesto released

 

கர்நாடக சட்டமன்றத்திற்கான ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர்.

 

இந்நிலையில், முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி கர்நாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறது. இதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சி நேற்று கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களது வாக்குறுதிகளை வெளியிட்டது.

 

இதனை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் பெங்களூருவில், கட்சியின் 12 அம்ச தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு பேசுகையில், "தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளை மிகச் சிறந்த முறையில் மேம்படுத்துவோம். தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்து  ஒழுங்குபடுத்த ஒரு குழுவை அமைப்போம். ஒப்பந்த ஆசிரியர்களின் பணியிடங்களை முறைப்படுத்துவோம். மாணவர்களுக்கு இலவசப் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன் ஆறு மாத கால வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்படும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வயது 16 ஆகக் குறைக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்தி  முன்னுரிமையின் அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.

 

கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் பிருத்வி ரெட்டி கூறுகையில், "ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். பொது மக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இலவச சுகாதாரம் மற்றும் விவசாயிகளின் விளை பொருட்கள் மீது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். சமூக நலன் காக்கப்படும். வீட்டிற்கே ரேஷன் பொருட்கள்  விநியோகம் செய்யப்படும். உள்ளூர் மக்களுக்கு 80% வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். பின்தங்கிய பகுதிகள் மேம்படுத்தப்படும் மற்றும் பெங்களூரில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அரசு வேலைக்கு கன்னட மொழி தெரிந்திருப்பது  கட்டாயமாக்கப்படும். விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும். சுவாமிநாதன் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து வழங்கப்படும். விவசாயத்திற்கு 12 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற தவறினால், மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் மீது வழக்கு தொடரலாம்" என்று கூறினார்.

 

டெல்லியில் முதலில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், கர்நாடக தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்ததுடன், தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளது. கர்நாடகா தேர்தலில் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம்” - டெல்லி எம்.பி. குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024

 

 "Anything can happen to Kejriwal in jail" - Delhi MP Accusation

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி சஞ்சய் சிங் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். மேலும், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக வீட்டில் சமைத்த உணவு, இன்சுலின் போன்றவை அவருக்கு மறுக்கப்பட்டு உள்ளதாக டெல்லி மந்திரி அதிஷி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்கும், டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பா.ஜ.க.வின் நடவடிக்கை ஒருவரைக் கொல்லும் நிலைக்குக்கூட தள்ளும். எனவே, சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக சதி செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார். 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.