Skip to main content

அனைத்துத் தரப்பினரிடமும் நிலவும் அச்சத்தை போக்குவார் செங்கோட்டையன்... ராமதாஸ் நம்பிக்கை!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

ramadoss


கரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தற்போது நடத்த வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியதுடன், பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள், கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், அதிகாரிகளே கூறிவருகின்றனர். தேர்வு எழுதிதான் தேர்ச்சி அறிவிக்க வேண்டும் என்பதில் தங்களக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மின்னல் வேகத்தில் கரோனா பரவும் நேரத்தில் எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் தேர்வு எழுத நல்ல மனநிலை வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் பெற்றோர்கள். எதிர்க்கட்சியினர் பலரும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 


இந்த நிலையில் ''10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், 12-ஆம் வகுப்பில் கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதைப் போன்று 11-ஆம் வகுப்பிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் விடுபட்ட பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தேர்வுத்துறை, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் பொதுத்தேர்வுகளை இப்போது நடத்துவதற்கு எதிராக இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் அரசு பிடிவாதம் காட்டுவது யாருக்கும் நன்மை பயக்காது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்தி தான் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் சூழலில் இத்தேர்வுகளை நடத்த வேண்டுமா? என்பது தான் இப்போதைய வினா. சென்னையில் நேற்று வரை 22,149 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 31,667 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவை அனைத்தும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப் பட்ட புள்ளி விவரங்கள் மட்டுமே. சோதிக்கப்படாமல் நோய்த்தொற்றுடன் நடமாடுவோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சென்னையில் ஒரு லட்சத்து 21,950 பேருக்கு கொரோனா ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன; அவர்களில் 22,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் ஐந்தரை பேருக்கு ஆய்வு நடத்தினால் அவர்களில் சராசரியாக ஒருவருக்கு கரோனா உறுதியாகிறது. ஒரு கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட சென்னையில் ஒரு லட்சத்துக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டும் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஐந்தரை பேரில் ஒருவருக்கு கரோனா உறுதி என்பதை அளவீடாகக் கொண்டால் சென்னையில் ஒட்டுமொத்தமாக எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதை மக்களே யூகித்துக் கொள்ளலாம். ஆய்வுக்கு உட்படுத்தப்படாதவர்களுக்கு கரோனா தொற்று இருக்க முடியாது அரசாலோ, அமைச்சர்களாலோ, அதிகாரிகளாலோ உறுதியளிக்க முடியாது.
 


 


சென்னையில் நூறு மீட்டர் தொலைவைக் கடந்து செல்வதற்குள் நாம் எதிர்கொள்ளும் மனிதர்களில் எவருக்கேனும் ஒருவருக்குத் தொற்று இருக்கலாம். காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் என மக்களை அதிக எண்ணிக்கையில் சந்திக்கும் அனைவருமே அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு, 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு என்ற பெயரில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்களை ஐந்து நாட்களுக்கு தேர்வு மையங்களில் ஒன்று திரட்டுவது மிகவும் ஆபத்தானதாகும். அவர்களுடன் 11-ஆம் வகுப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு தேர்வுக்காக 8.32 லட்சம் மாணவர்களையும், 12-ஆம் வகுப்பில் எழுதத் தவறிய கடைசி தேர்வை எழுதுவதற்காக சுமார் 35 மாணவர்களையும் குவிய வைப்பது நோயை விலை கொடுத்து வாங்கும் செயலாகவே அமையும். ‘‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’’ என்ற வள்ளுவரின் குறளை எழுத வைத்து அதற்கு மதிப்பெண் வழங்கும் தேர்வுத்துறை, அந்த திருக்குறளுக்கான பொருளைப் புரிந்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிர்களுடன் விளையாடக் கூடாது.

அரசுத் தேர்வுத்துறையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்குப் பொறுப்பாளரான ஓர் இணை இயக்குனர், ஓர் உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றிய ஓர் உதவியாளர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் என்றெல்லாம் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் கரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது? அது எவ்வளவு வேகமாகப் பரவும் என்பது குறித்தெல்லாம் மற்றவர்களை விட தேர்வுத்துறையினருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருந்தும் தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் காட்டக்கூடாது.

கரோனா ஆபத்து உச்சத்தில் இருக்கும் சூழலில் பொதுத்தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது மட்டுமின்றி கொடுமையானதும் கூட. தேர்வு மையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் கூட, 3 மணி நேரம் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதே பெரும் தண்டனை தான். ஓர் அறையில் 10 மாணவர்கள் மட்டும் தான் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் கூட ஒரு மையத்தில்  குறைந்தது 100 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒற்றைப் பொதுக்கழிப்பறையைத் தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு இவ்வாறு செய்வது மட்டுமே மாணவர்களிடையே கரோனா பரவுவதற்குப் போதுமானது.

மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுத, படித்திருப்பது மட்டும் போதாது. மகிழ்ச்சியான மனநிலையும்  தேவை. எந்த நேரத்தில் யாரிடத்திலிருந்து கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தில் இருக்கும் மாணவர்களால் எவ்வாறு தேர்வை நன்றாக எழுத முடியும். இவை அனைத்துக்கும் மேலாக, இவ்வளவு ஆபத்தான சூழலில் அவசரமாகப் பொதுத்தேர்வை நடத்தி நாம் எதைச் சாதிக்கப் போகிறோம்? மாணவச் செல்வங்களின் உயிர்களைப் பணயம் வைத்து தேர்வு தேவையா? எனச் சிந்திக்க வேண்டும்?
 

http://onelink.to/nknapp


கல்வித்துறை உயரதிகாரிகளில் பலருக்கும் இத்தேர்வுகளை அவசரமாக, ஆபத்தான சூழலில் நடத்துவதில் உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. பத்தாம் வகுப்புக்காவது தேர்வுகளை நடத்தியாக வேண்டும்; 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் எதற்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை- பொதுத்தேர்வில் தோல்வியடைந்தாலும் அதனால் பாதிப்பின்றி அடுத்த ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பில் பயிலலாம். அவ்வாறு இருக்கும் போது அந்த வகுப்புக்கு விடுபட்ட ஒரு பாடத்திற்கான தேர்வை நடத்தத் துடிப்பது போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும்.

எனவே, கரோனா அச்சம் முழுமையாக விலகும் வரை 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வையும், 12-ஆம் வகுப்பில் கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதைப் போன்று 11-ஆம் வகுப்பிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருப்பார் என்று நம்புகிறேன். ஆகவே, மேற்கண்ட கோரிக்கைகளைக் கொள்கை முடிவுகளாக எடுத்து அறிவிப்பார்; அதன்மூலம் மாணவர்கள், பெற்றோர், மக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் நிலவும் அச்சத்தை போக்குவார் என நம்புகிறேன்'' எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

Next Story

'அதன் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?'-பாமக ராமதாஸ் கேள்வி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'What's the secret? Will M.K.Stalin explain?'-pmk Ramadoss question

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக, கச்சத்தீவு விஷயத்தில் காங்கிரஸ் செய்தது துரோகம் என விமர்சனம் செய்துள்ளது

இதுகுறித்து பாமகவின் நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த  கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது  மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த  நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன்  விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால்  கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும்  கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது  தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர், தெரிந்தே அனுமதித்தார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்த போது கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தான். கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி இலங்கையிலும், 28 ஆம் தேதி தில்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதற்காக , கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு அடுத்த நாள் 29.06.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் 21.08.1974 அன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன. அப்போதைய கலைஞர் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை மத்திய அரசிடம் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் கலைஞர் அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்கு பயந்து தான் கலைஞர் மவுனமாக இருந்துவிட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை இப்போதும் மறுக்க முடியாது.

இலங்கைக்கு கச்சத்தீவு  தாரைவார்க்கப்பட்டதை  காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார்.  ஆனால், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் திமுக கூறுகிறது. இந்த சிக்கலில் திமுக மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.  

நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது, கல்வி உள்ளிட்ட மாநில அரசுப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் காங்கிரஸ் அரசால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது,  ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள்  இலங்கையில் படுகொலை செய்யப்பட்டது என பல விவகாரங்களில்  திமுக - காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின்  உச்சமாகவே உள்ளன.  ஆனாலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரசுடன் திமுக இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?' என தெரிவிக்கப்பட்டுள்ளது.