Skip to main content

மருத்துவக் கல்வி: அரசு மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்! -ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
ramadoss

 

 

அரசு பள்ளிகளில் படித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% இட ஒதுக்கீட்டால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 மாணவர்களுக்கும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். அதனால் கைக்கு எட்டிய மருத்துவக் கல்வி வாய்க்கு எட்டாதோ என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், அரசு பள்ளிகளில் படித்து வரும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதற்குத் தீர்வு காணும் வகையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு இட ஒதுக்கீடு நனவாகியுள்ளது.

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% இட ஒதுக்கீட்டின் பயனாக, 26 அரசு மருத்துவக்  கல்லூரிகளில் 227 மாணவர்கள், 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 இடங்கள் என மொத்தம் 313 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. அதேபோல், பல் மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை 2 அரசு கல்லூரிகளில் 12 மாணவர்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்கள் என மொத்தம் 92 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தால் ஒட்டுமொத்தமாக 405 பேர் பயனடைந்துள்ளனர். நீட் தேர்வுக்கு முன் அரசு மாணவர்களுக்கு சராசரியாக 40 இடங்கள் மட்டும் தான் இடம் கிடைத்து வந்தது. இப்போது அதைவிட 10 மடங்கு இடங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் 7.5% இட ஒதுக்கீட்டு மிகச்சிறந்த சமூகநீதி நடவடிக்கை.

 

ஆனால், மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தும் அதில் பல மாணவர்களால் சேர முடியவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.11,000 மட்டும் தான். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இது தடையாக இருக்காது. ஆனால், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 3.85 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.2.50 லட்சம் வசூலிக்கப் படுகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரி என்றாலும் கூட, அங்கு தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் காட்டிலும்  அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் தான். இவை தவிர ரூ. 3 லட்சம் வரை மறைமுகக் கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன.

 

தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் செலுத்த வேண்டிய விடுதிக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் சேர்த்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், அரசு பள்ளிகளில் படித்த ஏழை - கிராமப்புற மாணவர்களால் இந்த அளவு கட்டணத்தை செலுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. கல்விக்கட்டணம் செலுத்த வாய்ப்பில்லை என்பதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளிகளின் மாணவர்கள் தங்கள் மருத்துவம் / பல்மருத்துவப் படிப்புகளை தொடங்க முடியாமலோ, தொடர முடியாமலோ போய்விடக்கூடாது. சமூகநீதியின் அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஏற்பாடு செய்த தமிழக அரசு,  கட்டணம் செலுத்துவதற்கும் உதவி செய்து அவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க உதவ வேண்டும்.

 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாணவனுக்கு சராசரி கட்டணம் ரூ.4 லட்சம் எனும் நிலையில் 86 மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.3.44 கோடி செலவாகும். பல் மருத்துவப் படிப்புக்கு தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 80 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி செலுத்த வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகளில் பயிலும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம்/பல் மருத்துவம் படிக்க ஆண்டுக்கு ரூ.5.44 கோடி செலவழிப்பதில் தவறில்லை. அரசே கட்டணம் செலுத்துவதன் மூலம் தனியார் கல்லூரிகளில் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப் படுவதையும் தடுக்கலாம். அத்துடன் அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையில் ஈடு செய்து கொள்ளலாம். அதற்கு மாற்றாக, அவர்கள் அரசு மருத்துவ  மனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவாதத்தை எழுத்து மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

 

எனவே, அரசு பள்ளிகளில் படித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.