Skip to main content

உங்கள் முதல்வருக்கு எதுவும் தெரியாதா? - குஜராத் அரசை சாடிய உச்சநீதிமன்றம்!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

supreme court

 

கரோனாவால் இந்தியாவில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

 

மேலும், இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் உயிரிழப்புக்குக் காரணம் கரோனா என இல்லை என்பதற்காக மட்டுமே, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை மறுக்கக் கூடாது என உத்தரவிட்டது. இந்தச் சூழலில் குஜராத் அரசு, கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது.

 

இந்த ஆய்வுக்குழு, யாருக்காக இழப்பீடு கோரப்படுகிறதோ, அவர்களுடைய மரணத்தை ஆய்வு செய்து, கரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் இறந்தாரா என்பது குறித்து சான்றிதழ் அளிக்கும் என்றும், இந்தச் சான்றிதழை சமர்ப்பித்தே இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து குஜராத் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த நீதிமன்றம் ஒருபோதும் ஆய்வுக் குழுவை அமைக்கச் சொல்லவில்லை. உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள், ஆய்வுக் குழுவின் சான்றிதழைப் பெற ஒரு வருடத்திற்கும் மேலாகும்" என குஜராத் அரசின் முடிவை விமர்சித்தனர்.

 

மேலும் இந்த ஆய்வு குழு அமைக்க ஒப்புதல் அளித்தது யார் என கேள்வி எழுப்பினர். அதற்கு குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் முதல்வர்தான் ஒப்புதல் அளித்தார் என கூறவே, "உங்கள் முதல்வருக்கு எதுவும் தெரியாதா? செயலாளர் நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள். இந்த முடிவில் நீங்களும் சம்மந்தப்பட்டிருந்தால் உங்களுக்கு எதுவும் தெரியாது என அர்த்தம். உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? எங்கள் உத்தரவு உங்களுக்குப் புரிகிறதா? இது காலதாமதத்தை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்துவத்தின் முயற்சி" என கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தற்போதைக்கு இறப்பு சான்றிதழில் இறப்புக்கான கரணம் கரோனா என குறிப்பிடப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காவது 5000 ரூபாய் இழப்பீட்டை வழங்குங்கள் என உத்தரவிட்டு வழக்கை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான தரவுகளை, மாநிலங்களிடமிருந்து பெறுமாறும், குறைதீர்ப்பு கமிட்டி அமைக்குமாறும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்