Skip to main content

தவறாக நடக்க முயன்ற டாக்ஸி டிரைவர்; கீழே குதித்த இளம்பெண் - பதைபதைக்க வைக்கும் காட்சி

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

 young woman jumped off her bike to escape a taxi driver who tried to walk her wrong

 

நள்ளிரவு நேரத்தில் தவறாக நடக்க முயன்ற டாக்ஸி டிரைவரிடம் இருந்து தப்பிக்க இளம்பெண் ஒருவர் பைக்கில் இருந்து கீழே குதிக்கும் சிசிடிவி காட்சிகள் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டிக்கு அருகே உள்ளது இந்திரா நகர் சுற்றுவட்டாரம். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்தப் பகுதிக்கு கடந்த 23 ஆம் தேதியில் இரவு 11 மணியளவில் இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். இந்திரா நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் அந்த இளம்பெண், அங்கிருந்து தனது தோழியின் வீட்டிற்கு செல்வதற்காக பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார்.

 

இதையடுத்து, அந்த பெண்ணின் லொகேஷனுக்கு வந்த பைக் டாக்ஸி டிரைவர், அவரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு சேர வேண்டிய இடத்திற்கு தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பிறகு, அந்த பெண்ணிடம் ஓடிபி பெற வேண்டும் எனக்கூறி செல்போனை வாங்கிக்கொண்ட டாக்ஸி டிரைவர், அந்த பெண் கூறிய பாதையில் செல்லாமல் தொட்டபள்ளாப்பூர் சாலை நோக்கிச் செல்லும் மாற்றுப்பாதையில் சென்றுள்ளார். இதனால் பதற்றமடைந்த இளம்பெண், "ஹெலோ எக்ஸ்கியூஸ் மீ.. எதுக்கு இந்த ரூட்ல போறீங்க.. என்ன பண்றீங்க நீங்க" எனக் கேட்டதற்கு, "அந்த வழிய மூடி வெச்சிருக்காங்க. இதுதான் ஷார்ட்கட்" எனக் கூறி மழுப்பியுள்ளார். அந்த இளம்பெண் என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் அந்த டாக்ஸி டிரைவர் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். டிரைவரின் செயலால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடும் பைக்கில் இருந்து கீழே குதித்துள்ளார்.

 

இதைக் கண்ட பைக் டாக்ஸி டிரைவர், கண் இமைக்கும் நேரத்தில் தனது டூவீலரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார். அந்த சமயம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சிலர், பைக்கில் இருந்து கீழே விழுந்ததால் காயமடைந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய டாக்ஸி டிரைவரை அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது, போலீசாரின் விசாரணையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞர் ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயது தீபக் என்பதும், சம்பவத்தன்று அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தீபக்கை கைது செய்த செய்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், நள்ளிரவு நேரத்தில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட டாக்ஸி டிரைவரின் வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

சார்ந்த செய்திகள்