Skip to main content

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை! அமல்படுத்த மத்திய அரசு திட்டம்! 

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Work only 4 days a week! Central government plan to implement!

 

தொழிலாளர்கள் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கடந்த ஆண்டு முதலே திட்டமிட்டுவருகிறது மத்திய அரசு. கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

 

தொழிலாளர்கள் நலச் சட்டத்தின்படி தொழிலாளர்கள் வாரத்திற்கு 6 நாட்களும் ஒரு நாளைக்கு 8 மணி நேரமும் வேலை பார்த்துவருகிறார்கள். இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு, ஒருநாளைக்கு 12 மணி நேரம் என்ற அளவுகோலில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்! மற்ற 3 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்பதே புதிய திட்டத்தின் ஷரத்துகள்.

 

இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தில் இதற்கான விதிமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தொழிலாளர் நலத்துறையினர், “தொழிலாளர் நலச் சட்டத்தில் புதிய விதிகளைக் கொண்டுவருகிறது மத்திய அரசு. வாரத்தில் வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கை 4 ஆகவும், வேலை செய்யும் நேரம் தினமும் 12 மணிநேரமாகவும் வைக்கலாம்; மற்ற 3 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்களாக அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளனர்.

 

தினமும் 8 மணி நேரம், வாரத்திற்கு 6 நாட்கள் எனும்போது, மொத்த உழைப்பின் நேரம் 48 மணி நேரம் வருகிறது. அதையே தினமும் 12 மணி நேரம் என 4 நாட்களுக்கு உழைக்கும்போது அதே 48 மணி நேரம்தான் வருகிறது. ஆனால், பணி செய்யும் நேரத்தின் அளவு கூடும்போது பணிகள் முடிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை குறைகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்குவரும் என தெரிகிறது” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.