Skip to main content

யார் இந்த ஜெகதீப் தன்கர்?- விரிவான தகவல்! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Who is Jagadeep Dhankar?- Detailed Information!

 

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 10- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. 

 

இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பதற்கான பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (16/07/2022) மாலை நடைபெற்றது.

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, "பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார். 

 

Who is Jagadeep Dhankar?- Detailed Information!


 

ஜெகதீப் தன்கர் யார்? அவரை குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

கடந்த 1951- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிதானா பகுதியில் பிறந்தவர் ஜெகதீப் தன்கர். தற்போது இவருக்கு வயது 71. வழக்கறிஞரான இவர், பா.ஜ.க.வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கடந்த 1989- ஆம் ஆண்டு முதன்முறையாக மக்களவைக்கு ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனினும், 1990 முதல் 1991 வரை மட்டுமே மத்திய இணையமைச்சர் பதவியை வகித்துள்ளார். 

 

பின்னர், 1993- ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை முழுமையாக நிறைவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 2019- ஆம் ஆண்டு மேற்குவங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கரை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். 

 

தற்போது வரை ஆளுநர் பதவியில் நீடிக்கும் ஜெகதீப் தன்கருக்கும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வரும் சூழலில், அவரை பா.ஜ.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக அக்கட்சித் தலைமை தேர்வு செய்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அக்பர் - சீதா’ சர்ச்சை; சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
New names given to lions on 'Akbar - Sita' Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவைத் தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அந்தச் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள். எனவே இது போன்ற பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அக்பர் - சீதா பெயரால் சர்ச்சையில் சிங்களுக்கு புதிய பெயரை வைக்க மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு பரிந்துரைத்துள்ளது.

Next Story

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்; பா.ஜ.க கடும் குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJP strongly accused on mamata banerjee on Riots at Ram Navami Procession

நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை  குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை  கொள்ளையடிப்பதையும் மம்தாவின் காவல்துறை தடுக்க முடியவில்லை. 

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.