Skip to main content

தீயணைப்பு வீரர்கள் உட்பட ஒன்பது பேர் பலி - மீட்புப்பணி தொடர்பாக மம்தா குற்றச்சாட்டு!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

eastern railway

 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், கிழக்கு ரயில்வேக்கு சொந்தமான கட்டடத்தின் 13வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள், 2 ரயில்வே அதிகாரிகள், ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

இதனிடையே மீட்புப்பணி தொடர்பாக மம்தா பானர்ஜி ரயில்வே நிர்வாகத்தைக் குற்றஞ்சாட்டியுள்ளார். தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் வந்த மம்தா பானர்ஜி, "இந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது. இதற்கு பொறுப்பு வகிக்கும் அவர்களால், இந்தக் கட்டடத்தின் வரைபடத்தை வழங்க முடியவில்லை. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக நான் அரசியல் செய்ய விரும்பவில்லை, ஆனால் ரயில்வேயில் இருந்து யாரும் இங்கு வரவில்லை" எனத் தெரிவித்தார்.

 

ஆனால் இதற்குப் பதிலளித்துள்ள கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர், “ரயில்வே அதிகாரிகள் அங்கு இருந்தனர். உடனடியாக அவர்களால் வரைபடத்தை வழங்க முடியாமல் போயிருக்கலாம்” என்றார். இந்த விபத்து குறித்து உயர்மட்டக் குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்