Skip to main content

"நாங்கள் அவரை விடமாட்டோம்" - லக்கிம்பூர் விவகாரத்தில் ராகுல் காந்தி சூளுரை!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

RAHUL GANDHI

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

 

இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு விசாரணைக் குழு, சில தினங்களுக்கு முன்னர் லக்கிம்பூர் மாவட்ட நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது அலட்சியத்தால் நிகழ்ந்தது அல்ல என்றும், அந்த சம்பவத்தின் பின்னால் திட்டமிடப்பட்ட சதி இருந்ததாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

 

விவசாயிகள் கொல்லப்பட்டதில் சதி இருந்தது என்ற சிறப்பு விசாரணைக் குழுவின் கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்த எதிர்க்கட்சிகள், தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தின. அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், நாடாளுமன்றத்தில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கையை வலியறுத்தி அமளியில் ஈடுபட்டு அவ்வப்போது அவையை முடக்கினர்.

 

இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து விஜய் சௌக் பகுதிவரை போராட்ட அணிவகுப்பு நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் அவரை விடமாட்டோம். மத்திய இணையமைச்சர் சிறைக்கு அனுப்படுவார்” என கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியுள்ளதாவது, "அமைச்சர் (அஜய் மிஸ்ரா) தொடர்பாக பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களும் அதன் வேலையைச் செய்யவில்லை, பிரதமரும் அவரது வேலையைச் செய்யவில்லை. இந்தப் பிரச்னையை (லக்கிம்பூர் வன்முறை) மீண்டும் மீண்டும் எழுப்பினோம். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. இந்திய மக்களுக்கு எதிரான செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் அவரை (இணையமைச்சர்) அஜய் மிஸ்ராவை விடமாட்டோம். இன்றோ நாளையோ அவர் சிறைக்கு அனுப்பப்படுவார்.

 

அமைச்சரின் மகன் விவசாயிகளைக் கொன்றார். (சிறப்பு விசாரணைக் குழு) அறிக்கை, இது ஒரு சதி எனக் கூறுகிறது. இதுதொடர்பாக பிரதமர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நீங்கள் (பிரதமர்) அவர்களிடம் (விவசாயிகளிடம்) மன்னிப்பு கேட்கிறீர்கள், ஆனால் அமைச்சரை நீக்கவில்லை.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi road show in Wayanad

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையடினார்.

அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு அவர் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரோட் ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு ராகுல் காந்தியும் பொதுமக்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தினார். இத்தொகுதியில் சிபிஐ சார்பில் அன்னி ராஜாவும், பாஜக சார்பில் கேரள மாநிலத் தலைவர் கே சுரேந்திரனும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளது கவனிக்கத்தக்கது.