Skip to main content

காங்கிரஸின் குப்பைகள் எங்களுக்குத் தேவையில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

aravind kejriwal

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சிகள் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதேபோல் எதிர்க்கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்தநிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என நேற்று அறிவித்தார்.

 

இந்தநிலையில் இன்று ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் பள்ளிகளை மேம்படுத்துவோம் எனவும், ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது; டெல்லி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியது போல் பஞ்சாப் அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்துவோம். அதை எப்படி செய்வது என்று எங்களுக்கு மட்டுமே தெரியும், வேறு எந்த கட்சிக்கும் தெரியாது. ஆசிரியர்களின் பல பிரச்சனைகளை அவசரகால அடிப்படையில் தீர்ப்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

 

18 வருட அனுபவத்திற்குப் பிறகும், பஞ்சாப் ஆசிரியர்கள் அதிகபட்சமாக ரூ.10,000 மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்கள். டெல்லியில், திறமையற்ற தொழிலாளர்களுக்கு கூட குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000. அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.இலவச மின்சாரம் வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் சன்னி உறுதியளித்தார், இன்னும் எதுவும் நடக்கவில்லை. மொஹல்லா கிளினிக்குகளைப் பற்றி அவர் பேசினார் ஆனால் ஒன்று கூட அமைக்கப்படவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

 

காங்கிரஸில் உள்ள பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் அவர்களின் குப்பைகளை நாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் அதைச் செய்யத் தொடங்கினால், மாலைக்குள் 25 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் (பஞ்சாபில்) எங்களுடன் இணைவார்கள் என்று நான் சவால் விடுவேன். அவர்களின் 25 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2-3 எம்.பி.க்கள் எங்களோடு தொடர்பில் உள்ளதோடு எங்களுடன் சேர விரும்புகிறார்கள்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.