Skip to main content

உ.பி-யில் வெல்கிறோம்; ஜம்மு காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது - அமித் ஷா!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

amit shah

 

மத்திய அமைச்சர் அமித் ஷா, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தனியார் ஊடகம் ஒன்று நடத்திய தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பஞ்சாப் தேர்தல் கூட்டணி, உத்தரப்பிரதேச தேர்தல், ஜம்மு காஷ்மீர் விவகாரம் என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

 

பஞ்சாப் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அமித் ஷா, "நாங்கள் கேப்டன் (அமரீந்தர் சிங்)  மற்றும் திண்ட்சா சாப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை பொறுத்த வரையில், பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்கள் உங்களுக்கு பயனளிக்காது என்று நீங்கள் நினைத்தால், அவற்றை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என கூறி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பெருந்தன்மை காட்டியுள்ளார். பஞ்சாபில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறேன்" என கூறினார்.

 

தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, "“முதலில் ஜம்மு காஷ்மீரில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கை உள்ளது. அந்த பிராந்தியத்தில் எல்லை நிர்ணயம் வரையறை செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. எனவே, முதலில் எல்லை வரையறை நடக்கும். பின்னர் தேர்தல் நடக்கும். அதன்பின்னர் மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கும் செயல்முறை தொடங்கும். இதை நான் பலமுறை கூறியும் அரசியல் சர்ச்சையை மட்டுமே உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்" என தெரிவித்தார்.

 

மேலும் அவர், "துணை நிலை ஆளுநர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சூழல் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். மக்கள் நலத் திட்டங்களைப் பொறுத்தவரை, முதல் ஐந்து பிராந்தியங்களில் காஷ்மீரும் உள்ளது. காஷ்மீர் மக்கள் இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டப்பிரிவு 370 திரும்பப் அளிக்கப்படும்போதுதான் காஷ்மீர் அமைதியைக் காணும் என்று (பரூக்) அப்துல்லா கூறியதை நான் சமீபத்தில் பார்த்தேன். சட்டப்பிரிவு 370, 75 ஆண்டுகளாக இருந்தது, ஏன் அமைதி இல்லை? சட்டப்பிரிவு 370க்கும் அமைதிக்கும் இடையே தொடர்பு இருந்தால், 1990களில் ஏன் அமைதி இல்லை. (சட்டம் மற்றும் ஒழுங்கை) மதிப்பிடுவதற்கு எந்த பரிமாணத்தையும் பயன்படுத்திகொள்ளுங்கள். முன்பு இருந்த சூழ்நிலையில் 10 சதவீதத்தை கூட தொட மாட்டோம். அதற்கு அர்த்தம் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்பதுதான்" என கூறியுள்ளார்.

 

இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச தேர்தலை பற்றி பேசிய அமித் ஷா, "கூட்டணி அடிப்படையில் வாக்குகளை மதிப்பிடுவது சரியல்ல. அரசியல் என்பது இயற்பியல் அல்ல, வேதியியல். இரண்டு கட்சிகள் ஒன்று சேரும் போது, அவர்களின் வாக்குகளும் கூடும் என்பது எனக்கு உடன்பாடில்லாத மதிப்பீடு. இரண்டு இரசாயனங்கள் கலக்கும் போது வேறு சில இரசாயனங்கள் உருவாகின்றன. கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸும் ஒன்று சேர்ந்தன. பின்னர் மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. இரண்டு முறையும் பாஜக வெற்றி பெற்றது. வாக்கு வங்கி கணக்கை அடிப்படையாக கொண்ட கூட்டணிகளால் மக்கள் வழிநடத்தப்படுவதில்லை. நாங்கள் பெரும்பான்மையுடன் உ.பி.யில் வெற்றி பெறுகிறோம்" என சூளுரைத்தார்.

 

கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, "தேவையற்ற சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்பதால், தடுப்பூசியை அரசாங்கம் கட்டாயமாக்காது" என்றார். தொடர்ந்து கரோனா குறித்து பேசிய அவர், "மணி அடிப்பதையும், கைதட்டுவதையும், முகக்கவசம்  அணிவதையும் கேலி செய்தவர்கள் இன்று அமைதியாக உள்ளார்கள். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கரோனாவுடன் போராடின. இந்தியாவில் 130 கோடி மக்களைப் போரில் நரேந்திர மோடி ஒன்றிணைத்தார். நம் மக்களிடையே ஒழுக்கத்தை விதைத்தார். இதனால் நாம் இந்த போரில் வெற்றிபெற்றோம். லால் பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு, நரேந்திர மோடியின் வார்த்தைகளுக்கு நாடு அளித்த மரியாதையை வேறு எந்த தலைவருக்கும் அளித்து நான் பார்த்ததில்லை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த பகீர் சம்பவம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Incident happened on his pregnant wife in punjab

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், பிங்கி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது.

இதற்கிடையில், சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல், சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி பிங்கியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.