Skip to main content

உ.பி-யில் வெல்கிறோம்; ஜம்மு காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது - அமித் ஷா!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

amit shah

 

மத்திய அமைச்சர் அமித் ஷா, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தனியார் ஊடகம் ஒன்று நடத்திய தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பஞ்சாப் தேர்தல் கூட்டணி, உத்தரப்பிரதேச தேர்தல், ஜம்மு காஷ்மீர் விவகாரம் என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

 

பஞ்சாப் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அமித் ஷா, "நாங்கள் கேப்டன் (அமரீந்தர் சிங்)  மற்றும் திண்ட்சா சாப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை பொறுத்த வரையில், பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்கள் உங்களுக்கு பயனளிக்காது என்று நீங்கள் நினைத்தால், அவற்றை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என கூறி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பெருந்தன்மை காட்டியுள்ளார். பஞ்சாபில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறேன்" என கூறினார்.

 

தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, "“முதலில் ஜம்மு காஷ்மீரில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கை உள்ளது. அந்த பிராந்தியத்தில் எல்லை நிர்ணயம் வரையறை செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. எனவே, முதலில் எல்லை வரையறை நடக்கும். பின்னர் தேர்தல் நடக்கும். அதன்பின்னர் மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கும் செயல்முறை தொடங்கும். இதை நான் பலமுறை கூறியும் அரசியல் சர்ச்சையை மட்டுமே உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்" என தெரிவித்தார்.

 

மேலும் அவர், "துணை நிலை ஆளுநர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சூழல் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். மக்கள் நலத் திட்டங்களைப் பொறுத்தவரை, முதல் ஐந்து பிராந்தியங்களில் காஷ்மீரும் உள்ளது. காஷ்மீர் மக்கள் இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டப்பிரிவு 370 திரும்பப் அளிக்கப்படும்போதுதான் காஷ்மீர் அமைதியைக் காணும் என்று (பரூக்) அப்துல்லா கூறியதை நான் சமீபத்தில் பார்த்தேன். சட்டப்பிரிவு 370, 75 ஆண்டுகளாக இருந்தது, ஏன் அமைதி இல்லை? சட்டப்பிரிவு 370க்கும் அமைதிக்கும் இடையே தொடர்பு இருந்தால், 1990களில் ஏன் அமைதி இல்லை. (சட்டம் மற்றும் ஒழுங்கை) மதிப்பிடுவதற்கு எந்த பரிமாணத்தையும் பயன்படுத்திகொள்ளுங்கள். முன்பு இருந்த சூழ்நிலையில் 10 சதவீதத்தை கூட தொட மாட்டோம். அதற்கு அர்த்தம் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்பதுதான்" என கூறியுள்ளார்.

 

இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச தேர்தலை பற்றி பேசிய அமித் ஷா, "கூட்டணி அடிப்படையில் வாக்குகளை மதிப்பிடுவது சரியல்ல. அரசியல் என்பது இயற்பியல் அல்ல, வேதியியல். இரண்டு கட்சிகள் ஒன்று சேரும் போது, அவர்களின் வாக்குகளும் கூடும் என்பது எனக்கு உடன்பாடில்லாத மதிப்பீடு. இரண்டு இரசாயனங்கள் கலக்கும் போது வேறு சில இரசாயனங்கள் உருவாகின்றன. கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸும் ஒன்று சேர்ந்தன. பின்னர் மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. இரண்டு முறையும் பாஜக வெற்றி பெற்றது. வாக்கு வங்கி கணக்கை அடிப்படையாக கொண்ட கூட்டணிகளால் மக்கள் வழிநடத்தப்படுவதில்லை. நாங்கள் பெரும்பான்மையுடன் உ.பி.யில் வெற்றி பெறுகிறோம்" என சூளுரைத்தார்.

 

கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, "தேவையற்ற சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்பதால், தடுப்பூசியை அரசாங்கம் கட்டாயமாக்காது" என்றார். தொடர்ந்து கரோனா குறித்து பேசிய அவர், "மணி அடிப்பதையும், கைதட்டுவதையும், முகக்கவசம்  அணிவதையும் கேலி செய்தவர்கள் இன்று அமைதியாக உள்ளார்கள். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கரோனாவுடன் போராடின. இந்தியாவில் 130 கோடி மக்களைப் போரில் நரேந்திர மோடி ஒன்றிணைத்தார். நம் மக்களிடையே ஒழுக்கத்தை விதைத்தார். இதனால் நாம் இந்த போரில் வெற்றிபெற்றோம். லால் பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு, நரேந்திர மோடியின் வார்த்தைகளுக்கு நாடு அளித்த மரியாதையை வேறு எந்த தலைவருக்கும் அளித்து நான் பார்த்ததில்லை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.