![எ](http://image.nakkheeran.in/cdn/farfuture/df8y02opLp-6Kevywq0m_b2VVDF90AmHO97sm6RBr_Y/1534494474/sites/default/files/inline-images/edappadi-palanasami.jpg)
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது93) உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலையில் 7.40 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’50 ஆண்டுகாலம் இரு அவைகளில் உறுப்பினராக இருந்து சிறந்த முறையில் தலைவராக பொறுப்பு வகித்தவர். பாஜக வெற்றி பெற்று முதன்முதலாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், மக்களிடத்திலே அன்பாக பழகக்கூடியவர். நிர்வாக திறன் மிக்கவர். அப்படிப்பட்ட தேசப்பற்றுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கு பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பாஜகவின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’என்றார்.