2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டம், அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்பு, ஒரே நாடு ஒரே மின்சாரம், ஸ்வட்ச் பாரத் திட்டம், ஜல் சக்தி துறையின் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது, இந்தியாவில் படிப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் வரி உயர்வு, தங்கம் மீதான வரி உயர்வை பட்ஜெட்டில் அறிவித்தார்.
![union budgets hindi languages improve states rs 50 crores released minister nirmala sitharaman announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/cYx0XN1yZcyoXm9tKSWrDQqQjGH8nM77QrWfYLWQCi4/1562389994/sites/default/files/inline-images/D-sFu1xXkAAh497_4.jpg)
அதே போல் பேட்டரி வாகனங்களுக்கு வரி சலுகைகளையும் அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் சுமார் 4.5 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ராணுவத்தினரின் ஓய்வூதிய திட்டத்திற்கு மட்டும் ரூபாய் 1.5 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி ஆசிரியர்களை நியமித்து, இந்தியை கற்பிக்க பட்ஜெட்டில் ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டத்தின் படி 25 சதவிகிதத்திற்கும் மேலாக உருது பேசும் மக்கள் இருந்தால், அப்பகுதியில் உருது ஆசிரியர்களை நியமிக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.