Skip to main content

கோவாவில் கூட்டணி அமைத்தது திரிணாமூல் காங்கிரஸ்!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

MAMATA

 

மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ், தனது கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்தாண்டு தேர்தலை சந்திக்கவுள்ள கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறிவைத்து வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக கோவா ஃபார்வேர்டு கட்சியை கோவா திரிணாமூல் காங்கிரஸோடு இணைக்க, திரிணாமூல் காங்கிரஸ் தலைமை விரும்பியது. அது முடியாமல் போகவே, கோவா ஃபார்வேர்டு கட்சியோடு கூட்டணி அமைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயன்றது. ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. கோவா ஃபார்வேர்டு கட்சி காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இணைந்தது.

 

இந்தநிலையில் திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியோடு கூட்டணி அமைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றியது. பாஜக 13 இடங்களில் மட்டுமே வென்றது. ஆயினும் பாஜக மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகளுடனும், சுயேச்சைகளுடனும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை சேர்ந்த சுதின் தவாலிகர் பாஜக தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார்.

 

அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டில், மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிறகு கோவா அமைச்சரவையிலிருந்து சுதின் தவாலிகர் நீக்கப்பட்டார். மேலும்  மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியில் இருந்த மூன்று எம்.எல்.எக்களில் இரண்டு பேர் பாஜகவுக்கு தாவினர். இந்தநிலையில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணி அமைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்” - த.மா.கா கோரிக்கை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
TMc demand Election rules should be relaxed

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முழுமையாக முடிவடைந்த மாநிலங்களிலும், விரைவில் தேர்தல் முடியும் மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) தளர்த்த வேண்டும் என  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் சிறிய மாநிலங்களில் தேர்தல் முழுமையாக நிறைவடைந்துள்ளது. முதல் கட்டத்துக்குப் பிறகு, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முழு முடிவும் வெளியாகும் வரை எம்.சி.சி. இருக்கும்.

எனவே, எம்சிசியை ரத்து செய்ய இன்னும் 3 முதல் 5 நாட்கள் ஆகும். அதுவரை ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சித் தலைவர்கள், பல்வேறு அரசு, மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்கவோ, பொதுமக்கள் குறைகளைக் கேட்கவோ முடியவில்லை. வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு, மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அரசு விழாக்கள், புதிய பணிகளுக்கான பூமி பூஜை, நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் தொடக்க விழா, புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் விநியோகம், பொதுமக்கள் மனுக்கள் பரிசீலனை, டெண்டர் அழைப்பு போன்றவை நடக்கவில்லை. தேர்தல் நிலுவையில் உள்ள மாநிலங்களில் MCC விதிகளை அமல்படுத்துவது நியாயமானது. ஆனால் தேர்தல் முடிந்த மாநிலங்களில் எம்சிசியை அமல்படுத்துவது நியாயமானதல்ல. எம்.சி.சி தளர்வு மற்றும் தேர்தல் முடிந்த மாநிலங்களில் இயல்பான நிர்வாகம் ஆகியவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் செயல்முறையை பாதிக்காது, ஏனெனில் இங்கு திமுக  ஆட்சி வெளியிடும் அறிவிப்பு அண்டை மாநிலங்களின் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

மாநிலத்தில் 45 நாட்கள் நிர்வாகம் தேக்கம் அடைந்திருப்பது மக்களை, குறிப்பாக அரசாங்க உதவியை நாடும் ஏழை மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கும், மேலும் தேர்தல் ஆணையத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, ஏப்ரல் 19ம் தேதி இரவு 7 மணிக்கும் நள்ளிரவுக்கும் அறிவிக்கப்பட்ட இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் தேர்தல் ஆணையம் செய்த குழப்பம்  மற்றும் முறையான ஆவணங்கள் இல்லை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்தது, பணம் ரூ.50000 உச்சவரம்பு நிர்ணயம் செய்வது குறித்து இங்குள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.  எனவே, மருத்துவமனை, கல்லூரி சேர்க்கை, திருமணம், சொத்துப் பதிவு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்றவற்றுக்கு பணத்தை எடுத்துச் செல்வதில் தேர்தல் விதிமுறைகள்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. எனவே  த.மா.கா  இளைஞர் அணி சார்பாக  தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Next Story

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்; பா.ஜ.க கடும் குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJP strongly accused on mamata banerjee on Riots at Ram Navami Procession

நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை  குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை  கொள்ளையடிப்பதையும் மம்தாவின் காவல்துறை தடுக்க முடியவில்லை. 

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.