Skip to main content

“மத்திய அரசின் திட்டங்களையும் முழுவதுமாக செயல்படுத்துவதில் புதுச்சேரி  முதலிடம்”  - ஆளுநர் தமிழிசை பெருமிதம்! 

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

tamilisai said Puducherry has been  forefront fully implementing central govt schemes

 

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 21 வயது முதல் 55 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்ட துவக்க விழா கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில் எந்தவித அரசு உதவித்தொகையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 70 ஆயிரம் குடும்பத் தலைவிகள் பயனடைகின்றார்கள். மாதந்தோறும் அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகின்றது. இதன் மூலம் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகின்றது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

 

இந்த விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “மகளிருக்கு குடும்பத்தில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகளிர் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செலவில் 50 சதவீத கழிவு வழங்கியது பெண்களுக்கு மிகுந்த பயனளித்து வருகின்றது. அந்த வகையில் தான் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எல்லோருக்கும் அரசு உதவித்தொகை கிடைக்கின்றது என்ற நிலையை எனது அரசு உருவாக்கியுள்ளது. எந்த குடும்பமும் சாப்பாடு இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. இந்த அரசு சொன்னதை நிறைவேற்றும் அரசாக உள்ளது” எனக் கூறினார்.

 

tamilisai said Puducherry has been  forefront fully implementing central govt schemes

 

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “பெண்களுக்கு கையில் பணம் இருந்தால் அது அவரது குடும்ப நன்மைக்கு உதவும் என்பதை உணர்ந்த அரசு, குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையில் அனைத்து திட்டங்களையும் முழுவதுமாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. அதுபோல சுகாதாரத்தில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதலிடம் பெற்று முன்னேறி வருகின்றது என்பதுதான் உண்மை. இந்த அரசு அறிவிக்காததை செய்கின்றது. சில அரசு அறிவித்தும் செய்யவில்லை” எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.