Skip to main content

குளிர்கால கூட்டத்தொடர்: நாளை காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தவிருக்கும் எம்.பிக்கள்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

parliament

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காக காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட முடிவு செய்தனர். இதற்கிடையே நாடாளுமன்றம் கூடிய நிலையில், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

 

இதற்கிடையே மாநிலங்களவை கூடியதும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறுமாறு சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் வெங்கையா நாயுடு இடைநீக்கத்தை திரும்பப் பெற மறுப்பு தெரிவிக்கவே, மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்தநிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதவுள்ளனர். மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாளை நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.

 

இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இடைநீக்கம் செய்யப்பட்ட தங்களது எம்.பிக்கள் இருவரும், நாளை முதல் டிசம்பர் 23ஆம் தேதிவரை, காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை காந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

இன்று அறிவிக்கப்பட உள்ளதா தேர்தல் தேதி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Election date to be announced today?

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று அல்லது நாளை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் இருவர் பதவியேற்ற நிலையில் விரைவில் அட்டவணை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து சற்றுமுன் பதவி ஏற்று கொண்டனர். அதேநேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. இதனால் இன்று அல்லது நாளை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.