publive-image

Advertisment

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தரப்புக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

சிவசேனாவின் 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேவேளையில் சிவசேனாவின் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் தான் உள்ளனர் என்றும், ஆகவே உத்தவ் தாக்கரே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஏக்நாத் ஷிண்டே தரப்பு வழக்கை எற்றுக் கொண்டால், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசையும் கவிழ்க்க முடியும் என்பதாகிவிடாதாஎன வினவினார். அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் தடை இருந்தும், மாநில அரசுகளை கலைக்க முடியும் எனில் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் கபில்சிபல் வாதிட்டார்.

Advertisment

இரு தரப்பு மனுக்களில் பல பிரச்சனைகள் இருப்பதால், அவற்றை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைச் செய்ய வேண்டி இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை, சட்டப்பேரவையின் சபாநாயகர் தற்போதைய நிலையைப் பேணுவார் என்றும், தகுதி நீக்க மனுக்களில் அவர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைக்குமாறு மகாராஷ்டிரா சட்டப்பேரவைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகள் மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.