Skip to main content

"உண்மைக்கு வெற்றி... சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவம் தோற்றுவிட்டது" - சோனியா காந்தி அறிக்கை!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

sonia gandhi

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

இந்த அறிவிப்பு குறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவம் தோற்றுவிட்டது என தெரிவித்துள்ளார்.

 

வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பு குறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ஏறக்குறைய 12 மாத காந்தியப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று 62 கோடி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் மன உறுதிக்கும் வெற்றி கிடைத்துள்ளது. 700க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் தியாகத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. இன்று உண்மை, நீதி, அகிம்சைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

 

இன்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ஆட்சியில் இருப்பவர்கள் தீட்டிய சதி தோல்வியடைந்துள்ளது. எனவே சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்றுள்ளது. இன்று வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் தாக்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அன்னதாதாக்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

 

இந்திய அரசின் கூற்றுப்படி, விவசாயிகளின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு ₹ 27 ஆக குறைந்துள்ளது. சராசரி கடன் சுமை 74,000 ஆக உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்தவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மூலம் நியாயமான விலையை எவ்வாறு பெறுவது என்பதை அரசாங்கம் மீண்டும் சிந்திக்க வேண்டும்.

 

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு முடிவையும் ஒவ்வொரு பங்குதாரருடனும் பேசி, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். இதிலிருந்து எதிர்காலத்திற்காக மோடி அரசு ஏதாவது கற்றுக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.’ இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, இன்றைய நாளை விவசாயிகள் வெற்றி தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது. தவறான முடிவுகளுக்கு எதிராக விவசாயிகளின் நிலையான மற்றும் உணர்வுப்பூர்வமான போராட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக விவசாயிகள் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் இந்த தினத்தை முன்னிட்டு, விவசாயிகள் வெற்றி பேரணியையோ விவசாயிகள் வெற்றி சபைகளையோ நடத்துமாறு மாநில காங்கிரஸ் அமைப்புகளை அறிவுறுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Former Prime Minister Manmohan Singh retires

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.