Skip to main content

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு; பரபரப்பு சம்பவம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Shoes thrown at PM Modi's car in varanasi

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா 234 இடங்களை கைபற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் தனித்து 99 இடங்களைக் கைபற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. 

பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு நேற்று (18-06-24) சென்றார். அங்கு நடைபெற்ற ‘பிஎம் கிசான் சமேலன்’ என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்தார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரில் வருவதைக் கண்ட பொதுமக்களும், பா.ஜ.க தொண்டர்களும் சாலையோரம் நின்று கையசைத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்த போது பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு ஒன்று விழுகிறது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், காரில் இருந்த செருப்பை எடுத்து தூக்கி எறிகிறார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்