Skip to main content

பங்குச்சந்தையில் இன்று... எதை வாங்கலாம்? எதை விற்கலாம்?

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

SHARE MARKET SENSEX, NIFTY


இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாயன்றும் (ஜூலை 7) தொடர்ச்சியாக ஆறாம் நாளாக களைகட்டின. நிப்டி ஒரே ஒரு புள்ளியில் அதன் புதிய அடையாளத்தைத் தொடாமல் 10799.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்திருந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 187.24 புள்ளிகள் ஏற்றத்துடன் 36674.52 புள்ளிகளுடன் அமர்க்களமாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. 

 

நிப்டியில் ஏற்ற, இறக்கம்:

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் பஜாஜ் பைனான்ஸ் (7.76%), இண்டஸ் இந்த் (5.86%), பஜாஜ் பைனான்சியல் சர்வீஸ் (4.47%), ஐஷர் மோட்டார்ஸ் (3.89%), ஐசிஐசிஐ வங்கி (3.52%) ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளித்தன.

 

அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், கிராசிம், பிபிசிஎல், ஐடிசி ஆகிய பங்குகள் வீழ்ச்சி கண்டன. நிப்டியில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கித்துறை பங்குகள், ஆட்டோமொபைல், நிதிச்சேவைகள், ஐ.டி., ஊடகம் ஆகிய துறைகளின் பங்குகள் கணிசமான ஏற்றம் கண்டிருந்தன.

 

SHARE MARKET SENSEX, NIFTY

 

சென்செக்ஸ் நிலவரம்: 

 

தேசிய பங்குச்சந்தையில் பல ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகள் எதிர்பாராத லாபத்தை அள்ளி வழங்கின. அதன்படி மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ், ரெயின், பாஷ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பைனான்சியல், ஈக்விடாஸ், பந்தன் வங்கி, ஸ்பிக், டெரா சாப்ட்வேர் உள்ளிட்ட பல பங்குகள் சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேல் ஆதாயம் அளித்தன. சென்செக்ஸ் 30 இல் உள்ள நிறுவனங்களின் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் சற்று சரிவையும் சந்தித்தன. 

 

11,000 புள்ளிகளை நோக்கி:

 

பல ஹெவிவெயிட் கவுண்டர்களில் பங்குகளின் விலை சரியும்போது முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டு பங்குகளை வாங்கியதால் சந்தை போக்கு சாதகமான நிலையில் இருக்கிறது. நிப்டியின் குறியீடு 11000 புள்ளிகளை நோக்கி நகர்வதற்கு அதன் ஆதரவு மட்டம் 10650 புள்ளிகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், சரிவை நோக்கிச் செல்லும்பட்சத்தில் 10550 மற்றும் 10450 புள்ளிகள் வரை வர்த்தகம் நடைபெறலாம் எனக் கணித்துள்ளனர் சந்தை ஆய்வாளர்கள்.

 

''நிப்டியின் போக்கு மேலும் மேலே செல்லும்போது 10887 அளவை எட்டக்கூடும். இது கடந்த 200 நாள் வர்த்தக அளவைக் காட்டிலும் நல்ல நிலைதான். எனினும், குறியீட்டெண் ஆதரவு மட்டம் 10690 புள்ளிகளுக்குக் கீழே இறங்கினால் தேசிய பங்குச்சந்தையில் பலவீனம் உண்டாகும்,'' என்கிறார் ஹெச்டிஎப்சி செக்யூரிட்டிஸின் தீபக் ஜசானி.

 

நிப்டியின் இப்போதைய வர்த்தக நிலை, கடந்த 50 நாள்களின் சராசரியைக் காட்டிலும் அதிகம். இச்சந்தையின் போக்கு மேலும் மேலே உயரும் என்கிறார் சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் சுமித் பகாடியா.

 

SHARE MARKET SENSEX, NIFTY

 

நிப்டியில் குறியீடு இன்று (ஜூலை 8) 10850 & 10900 என்ற அளவில் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை, சந்தையில் சரிவு ஏற்பட்டால் 10570 புள்ளிகள் வரை வீழ்ச்சி காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.

 

அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி ஆசிய பங்குச்சந்தைகளும் நேற்று கணிசமாக ஏற்றத்துடன் வர்த்தகம் நடந்தது. அதனாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஓரளவு உயர்வு கண்டன.

 

ஆதாயம் தரும் பங்குகள்:

 

சந்தைப் போக்கின் அடிப்படையில் பின்வரும் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. டாடா மோட்டார்ஸ், என்பிசிசி (இண்டியா), ராஷ்டிரிய கெமிக்கல்ஸ், எம்டிஎன்எல், ரெயின் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், டின் பிளேட், ஜேகே டயர் அண்டு இண்டஸ்ட்ரீஸ், ஸ்பிக், சிட்டி யூனியன் வங்கி, மங்களூர் கெமிக்கல்ஸ், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், வோல்டாஸ், ஹேவல்ஸ் இண்டியா ஆகிய பங்குகளிள் முதலீடு செய்யலாம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

 

SHARE MARKET SENSEX, NIFTY

 

http://onelink.to/nknapp

 

ஆர்வம் உள்ள பங்குகள்:

 

எஸ்கார்ட்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், வைபவ் குளோபல், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், நவீன் புளூரைன் ஆகிய பங்குகள் எதிர்காலத்தில் அதிக ஆதாயம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது.

 

அதேநேரம், பிசி பவர் கண்ட்ரோல்ஸ், டச்வுட் என்டர்டெயின்மென்ட், மிட்டல் லைப் ஸ்டைல் மற்றும் ஓமாக்ஸ் ஆகிய பங்குகளை விற்று விடலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

 

இன்று முடிவு வெளியாகும் பங்குகள்:

 

சவுத் இந்தியன் வங்கி, ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்க்ஸ், டிஷ் டிவி இண்டியா, கொகுயா கேம்லின், புரோசன் இன்டூ பிராப்பர்டீஸ், மாதவ் காப்பரேஷன், ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்கின்றன. இதன் லாப-நட்டங்களைப் பொருத்து இப்பங்குகள் இன்று சந்தையில் முக்கியத்துவம் பெறும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.