Skip to main content

சேர்மன் பதவி வாங்கித் தருவதாக மோசடி- பாஜக பிரமுகரிடம் 26 லட்சம் சுருட்டல்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Scam to buy the post of chairman - 26 lakhs from a BJP figure!

 

புதுச்சேரி அடுத்த கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்தவர் சீனிவாச பெருமாள். மிஷின் வீதியில் துணிக் கடை நடத்தி வருகிறார். இவர் புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியில் வணிக பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். இவரது கடைக்கு சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரேமவதி, செந்தில் ஆகியோர் வந்தனர். அப்போது சீனிவாச பெருமாளிடம் பேச்சு கொடுத்த இருவரும், டெல்லியில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதிகாரிகள் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளனர். நாங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தங்களை பெரிய ஆள் போன்று காட்டி கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் சீனிவாச பெருமாள் தொடர்பிலிருந்து வந்தார். ஒருநாள் அவருக்கு போன் செய்த பிரேமவதி, ' நாங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்துள்ளோம். முக்கியமான விஷயம் பேச வேண்டும்' என்று அழைத்தனர். இதை தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு சீனிவாச பெருமாள் சென்றார்.

 

அப்போது தங்கள் நண்பர்கள் என்று கணேசமூர்த்தி, சௌந்தர், பிரேம் ஆகியோரை சீனிவாச பெருமாளுக்கு பிரேமவதி அறிமுகம் செய்து வைத்தார். ' புதுச்சேரி அரசுக்கு வருமானம் அதிகம் கொடுப்பது கலால்துறை. இந்த கலால் துறைக்கு சேர்மன் பதவி இருக்கிறது. இதற்கு மதிப்பு அதிகம். இதை வாங்க பலரும் கையில் பணம் வைத்து கொண்டு வரிசையில் நிற்பதாகவும், பழகிய நபர் என்பதால் உங்களுக்கு அந்த பதவியை வாங்கி கொடுக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தொடர்பாக டெல்லி அதிகாரிகளிடம் பேசி ஒப்புதல் வாங்கி விட்டோம். இந்த சேர்மன் பதவி உங்களுக்கு வந்து விட்டால், வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம்' என்று ஆசை வார்த்தை கூறினார்.

 

Scam to buy the post of chairman - 26 lakhs from a BJP figure!

 

இதில் மயங்கிய போன சீனிவாச பெருமாள், கலால்துறை சேர்மன் கனவில் மிதக்க ஆரம்பித்தார். இதற்காக ரூ. 26 லட்சம் பணம் கேட்டது சென்னை கும்பல். இதற்கு சம்மதம் தெரிவித்த சீனிவாசபெருமாள், வங்கி கணக்கு மூலம் செந்திலுக்கு ரூ 15 லட்சம் அனுப்பி வைத்தார். மேலும் பிரேமவதி கையில் ரூ 11 லட்சம் பணத்தை கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட அந்த கும்பல், இன்னும் ஒரு வாரத்தில் ஆர்டர் காப்பி வந்து விடும். அதன் பிறகு நீங்கள் பதவி ஏற்று கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்னை சென்றது. ஒரு வாரத்திற்கு பிறகு எந்த வித ஆர்டரும் வரவில்லை. இதையடுத்து பிரேமவதியை தொடர்பு கொண்டு கேட்ட போது சரியான பதில் கூறவில்லை. பின்பு சென்னை சென்று தேடிய போது அவர்கள் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாச பெருமாள், சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் சென்னையைச் சேர்ந்த பிரேமவதி, செந்தில், கணேசமூர்த்தி, சௌந்தர், பிரேம் ஆகியோர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.