Skip to main content

புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020
Request to provide 7.5 percent reservation for government school students in medical studies in Puducherry too!

 

புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தைப் போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சென்ற 15.09.2020 அன்று தமிழக சட்டப்பேரவையில் நீட்டில் தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. இச்சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரையில் தமிழக ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மேற்சொன்ன இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்ததோடு கண்கலங்கி உள்ளார். மேலும், தமிழக ஆளுநரின் செயலர் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.  மேலும், இந்த இடஒதுக்கீடு சட்ட முன்வரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரையில் மருத்துவப் படிப்பு  சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த போவதில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு கொண்டு வந்த பின்னால் புதுச்சேரியின் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவி மட்டும் நீட்டில் தேர்ச்சிப் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைப் பேர் நீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

புதுச்சேரியில் 2 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1570 மருத்துவ இடங்கள் உள்ளன. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்கு 50 சதவீத இடங்களைப் பெறுவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து வெறும் 33 சதவீத மருத்துவ இடங்களை மட்டுமே அரசு பெறுகிறது. மேலும், இதில் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு மருத்துவ இடங்களைக்கூட தருவதில்லை. இதனால், புதுச்சேரி மாணவர்கள் பெருமளவில் வஞ்சிக்கப்படுகின்றனர்.

எனவே, தமிழகத்தைப் போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில், மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு நடத்த கூடாது. மேலும், அரசு ஒதுக்கீட்டிற்காக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடம் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற  வேண்டுமெனவும் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.