Skip to main content

தமிழ்நாட்டை பின்பற்ற மம்தாவுக்கு கோரிக்கை! நீட்டுக்கு எதிராக வலுக்கும் போராட்ட குரல்! 

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Request to Mamta to follow Tamil Nadu! Voice of struggle against NEET

 

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் வலுத்துவருகிறது. அந்த மாநிலத்தின் தேசிய அமைப்பான ‘பங்ளா பொக்கே’ என்ற அமைப்பு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிவருகிறது. கடந்த 18ஆம் தேதி கொல்கத்தாவில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய பலரும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை போல நமது முதல்வர் மம்தா பானர்ஜியும் செயலாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பங்களா பொக்கே அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் கார்கா சாட்டர்ஜி, “நீட் தேர்வு என்பது சொந்த மாநிலத்தில் டாக்டராக வேண்டும் என்ற வங்காள மக்களின் கனவுகளை சிதைத்துவிடும். சிதைத்துக்கொண்டும் இருக்கிறது. இந்தி பேசுகின்ற மாநிலங்களில் இயங்கும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு பயிற்சி மையங்கள், சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனங்கள் ஆகிய மூன்றும் கூட்டு சேர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவுகளைத் திருடுகின்றன.

 

இனி அடுத்தடுத்து வரும் நாட்களில், தேசிய தேர்வு முகமை மூலம் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வுகளைப் புகுத்தி அனைத்தையும் இந்திமயமாக்கும் திட்டத்தை டெல்லி எடுத்துவருகிறது.

 

இந்தி மொழிக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்கும் நாம் அடிமைகள் கிடையாது. வங்காள மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை வேர்கள் அற்ற ஒட்டுண்ணிகளால் திருட முடியாது; திருடவும் அனுமதிக்கக் கூடாது! வங்காள மாணவர்களின் எதிர்காலத்திற்கான போராட்டம் இது. 2024இல் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் என்பது வெறுமனே பாஜகவுக்கு எதிரான தேர்தல் மட்டுமல்ல; அது பெரும் போர். அந்தப் போர் என்பது, டெல்லியில் குவிந்து கிடக்கும் மாநிலங்களுக்கான அதிகாரங்களை மீட்டெடுக்கும் போராட்டமாகவும் அந்தத் தேர்தல் போர் இருக்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.

 

கூட்டத்தில் பேசிய செயற்பாட்டாளர்கள் அனைவரும், “நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு முன்மாதிரியாக தமிழ்நாடு செயல்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை துவக்கியிருக்கிறார். அவருக்கு இந்தி பேசாத அனைத்து மாநிலங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களின் தளபதி அவர்தான். நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சனையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும். நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் முடிவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டைப் போல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சட்டமியற்றி குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் தர வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினர்.

 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டைப் பின்பற்றி மேற்கு வங்கத்தில் போராட்டமும் கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.