Skip to main content

32 பேரும் விடுதலை செய்யப்பட காரணம் இதுதான்..? தீர்ப்பில் நீதிபதிகள் அறிவிப்பு...

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

reason for babri masjid verdict

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழங்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணையின்போதே உயிரிழந்தனர். 

 

இதைத்தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கரோனா ஊரடங்கு காலத்தில் காணொளிகாட்சி மூலமாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து நீதிபதி தீர்ப்பில் தெரிவிக்கையில், "பாபர் மசூதி இடிப்பை அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தான் தடுத்தனர். பாபர் மசூதி இடிப்பது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது இல்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்பிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? - தொல்.திருமாவளவன் காட்டம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
President Draupadi Murmu was made to stand while presenting the award to Advani

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று முன்தினம் (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வின்போது அத்வானி அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பது போன்றும், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நிற்பது போன்று புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த விசிக தலைவர் திருமாவளவன், “பிரதமர், மேனாள் துணைப் பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?  

தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா? இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது  இவர் பழங்குடி என்பதாலா? அல்லது  அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்க வைத்து படம்பிடித்து வெளியிடுவது என்ன வகை பண்பாடு?  பெரும் அதிர்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், பாஜக ஆட்சியின் கீழ் எங்கள் குடியரசு தலைவர் மீது காட்டப்படும்   அவமரியாதை வருத்தமளிக்கிறது. நமது தேசத்தின் அரசியலமைப்புத் தலைவரைக் கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு அப்பட்டமான சான்றாக விளங்குகிறது” விமர்சித்துள்ளார்.

Next Story

அத்வானி இல்லத்திற்கே வந்த ‘பாரத ரத்னா’ விருது!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Advani awarded Bharat Ratna The President who went to his home

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்நிலையில் அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாதாக இந்தியாவின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அத்வானி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியல் தலைவரான அத்வானி, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும், தனித்துவத்துடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளார். கடந்த 1927 ஆண்டு கராச்சியில் பிறந்த அவர், பிரிவினையின் காரணமாக 1947 இல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். பண்பாட்டு தேசியம் பற்றிய அவரது பார்வையும், அவர் பல தசாப்தங்களாக, நாட்டிற்காக முழுவதும் கடுமையாக உழைத்து, சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்தார்.

Advani awarded Bharat Ratna The President who went to his home

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, விவாதத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம் நாடாளுமன்ற மரபுகளை வளப்படுத்தியது. உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, துணைப் பிரதமராக இருந்தாலும் சரி, அவர் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து, கட்சி எல்லைகளுக்கு அப்பால் அவருக்கு மரியாதையையும் பாராட்டையும் பெற்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.