Skip to main content

"பாரத ரத்னா பிரச்சாரத்தை நிறுத்துங்கள்" - அபிமானிகளுக்கு ரத்தன் டாடா வேண்டுகோள்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

ratan tata

 

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் தனது சமூக பணிகளுக்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

 

இந்தநிலையில் தற்போது ரத்தன் டாடாவிற்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை அவரது அபிமானிகள் ட்விட்டர் வலைதளத்தில் எழுப்பி வருவதோடு, இதுதொடர்பாக ஹாஷ்டேக் ஒன்றையும் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

 

இதையடுத்து ரத்தன் டாடா, தனக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை நிறுத்துமாறு, தனது அபிமானிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக ஊடகங்களில் ஒரு பகுதியினர், விருது தொடர்பாக வெளிப்படுத்திய உணர்வுகளை மதிக்கிற அதேவேளையில், இதுபோன்ற பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். மேலும் அவர், “இந்தியனாக இருப்பதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் பங்களிக்க முயற்சி செய்வதற்கும், நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்வானி இல்லத்திற்கே வந்த ‘பாரத ரத்னா’ விருது!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Advani awarded Bharat Ratna The President who went to his home

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்நிலையில் அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாதாக இந்தியாவின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அத்வானி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியல் தலைவரான அத்வானி, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும், தனித்துவத்துடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளார். கடந்த 1927 ஆண்டு கராச்சியில் பிறந்த அவர், பிரிவினையின் காரணமாக 1947 இல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். பண்பாட்டு தேசியம் பற்றிய அவரது பார்வையும், அவர் பல தசாப்தங்களாக, நாட்டிற்காக முழுவதும் கடுமையாக உழைத்து, சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்தார்.

Advani awarded Bharat Ratna The President who went to his home

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, விவாதத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம் நாடாளுமன்ற மரபுகளை வளப்படுத்தியது. உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, துணைப் பிரதமராக இருந்தாலும் சரி, அவர் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து, கட்சி எல்லைகளுக்கு அப்பால் அவருக்கு மரியாதையையும் பாராட்டையும் பெற்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது; அன்றே இந்தியா கூட்டணியிலிருந்து விலகிய பேரன்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
saran singh who left the alliance with India after Bharat Ratna award to his grandfather

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 9 ஆவது பிரதமராகப் பதவி வகித்தவர் ஆவார். சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் நரசிம்மராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழி நடத்தியது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆவார். இவர் சவாலான நேரத்தில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவியதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கும், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், சரண் சிங்கின் பேரனும் ஆர்.எல்.டி கட்சித் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “முந்தைய அரசுகளால் இன்றுவரை செய்ய முடியாததை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நிறைவேற்றி உள்ளார். எளிய மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் எனக்கு மிகப்பெரிய நாள்; மிகவும் உணர்ச்சிகரமான நாள். குடியரசு தலைவர், மத்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து, ‘நீங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளீர்களா’ என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “கூட்டணி வாய்ப்பை என்னால் எவ்வாறு மறுக்க முடியும்? அதே நேரத்தில் தொகுதிகள் குறித்தோ, வாக்குகள் குறித்தோ பேசுவதற்கான நாள் அல்ல இது. மக்களின் உணர்வுகளையும் நாட்டின் இயல்பையும் பிரதமர் மோடி உணர்ந்து இருக்கிறார் என்பதை அவர் தனது இந்த முடிவின் மூலம் உணர்ந்திருக்கிறார்” என்று கூறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதை உறுதி செய்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில், இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளமும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று உத்தரப் பிரதேச அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.