Skip to main content

‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் நகைக்கடைக்காரரிடம் 50 லட்சம் மோசடி செய்த கும்பல்...

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

pune man got cheated by friend using sand

 

‘சதுரங்க வேட்டை’ படப் பாணியில் நகைக்கடைக்காரர் ஒருவரை ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல். 

 

புனேவின் ஹடாஸ்பூரில் நகைக்கடை நடத்திவரும் நபர் ஒருவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். நகை வாங்குவதற்காக அந்தக் கடைக்கு வந்த அவர், காலப்போக்கில் அந்த நகைக்கடைக்காரரிடம் நட்பு பாராட்டி அவருக்கு நெருக்கமானவராக மாறியுள்ளார். அந்த நபர் நகைக்கடைக்காரரின் குடும்பத்தினருடன் நன்றாகப் பழகியதோடு, அவர்கள் வீட்டிற்குப் பால் விநியோகம் செய்வதையும் வாடிக்கையாகச் செய்துவந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் தனது நண்பர்கள் இருவரோடு அந்த நகைக்கடைக்காரரைப் பார்க்கவந்த அந்த நபர், மேற்குவங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு அரியவகை மணல் தங்களிடம் இருப்பதாகவும், அதனைச் சூடேற்றினால் அது தங்கமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார். 

 

மேலும், மணலை எவ்வாறு தங்கமாக மாற்ற வேண்டும் எனவும் நகைக்கடைக்காரருக்கு விளக்கம் அளித்துள்ளனர். இவர்களின் பேச்சால் கவரப்பட்ட நகைக்கடைக்காரர், அந்த நபரிடம் ரூ .30 லட்சம் ரொக்கமும், சுமார் 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும் கொடுத்து அந்த மணலை வாங்கியுள்ளார். கடைசியில் அந்த மணலை சூடேற்றியபோதுதான், அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நகைக்கடைக்காரர், உடனடியாக இது தொடர்பாக ஹடாஸ்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மணலை விற்ற நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹிந்து மாணவிகளுடன் பேசிய இஸ்லாமிய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to the Muslim student who spoke with the Hindu girls

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் சாவித்ரிபாய் புலே என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும், 19 வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஹிந்து மாணவிகளுடன் பேசியதாகவும், மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவர் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பிரிவில் படித்து வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் சுமார் ஒன்பது மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, 6 மாணவர்கள் அந்த கேண்டீனுக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் அட்டை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், மதம் தொடர்பாக தவறாகப் பேசி அவரைத் தாக்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.