Skip to main content

புதுச்சேரி: நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ் சங்க கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு! சமூக அமைப்புகள் கண்டனம்!!

Published on 05/07/2020 | Edited on 05/07/2020

 

puducherry tamil association building case pending for supreme court MLA office

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழ் சங்க கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததற்கு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

 

இதுகுறித்து புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'புதுவை தமிழ்ச் சங்க கட்டடம் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, அக்கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததைச் சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

புதுவை தமிழ்ச் சங்க கட்டடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 20 லட்சத்தில் கட்டப்பட்டது. தமிழ்ச் சங்கத்திற்கு இடம் சொந்தமாக இருந்தாலும், கட்டடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு (DRDA)சொந்தமானது. இதுகுறித்து அப்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குநர் இடையே பதிவுச் செய்யப்பட்ட ஒப்பந்தம் உள்ளது.

 

இக்கட்டடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைக்கவே பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் மேற்சொன்ன ஒப்பந்தத்தை மீறி கட்டடத்தை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்து வருகின்றனர். மேலும், இவ்வாறு வசூலாகும் பணத்திற்கும் முறையாக கணக்கு வைக்காமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளை தணிக்கை செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை. பணப் பயன் பெறும் வகையிலும், நூலகம் தவிர வேறு பயன்பாட்டிற்குக் கட்டத்தைப் பயன்படுத்தவும் கூடாது என ஒப்பந்தத்தில் கூறியதை அப்பட்டமாக மீறி செயல்பட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, கட்டடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது (W.P.No. 2071 of 2020).

 

இந்நிலையில், கடந்த 24.06.2020 அன்று, தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு நிலுவையில் உள்ள போது, இவ்வாறு கட்டடத்தை ஒப்பந்தத்தை மீறி வேறு பயன்பாட்டிற்கு விட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். எனவே, புதுச்சேரி அரசு இதில் தலையிட்டு தமிழ்ச் சங்கக் கட்டடம் உள்ளது உள்ளபடியே (Status Quo) இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அந்த கூட்டறிக்கையில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இராவணன் பகுத்தறிவு இயக்கம், செம்படுகை நன்னீரகம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, தமிழர்களம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.