தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழை நீரை அகற்றி வருகின்றனர்.
அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழைக் காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (4/11/2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக் காரணமாக இன்று புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.