Skip to main content

'நிவர்' புயலை எதிர்கொள்ள புதுச்சேரியில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட தயாராக உள்ளன... -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

puducherry cm narayanasamy press meet nivar cyclone

 

 

'நிவர்' புயலானது புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

 

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், வருவாய்த்துறை அதிகாரிகள் கனகச்செட்டிக்குளம், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை கிரேன் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தி வைக்க மீன்வளத்துறைக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். 

 

puducherry cm narayanasamy press meet nivar cyclone

 

மேலும் அங்குள்ள மீனவ மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து அவர்களின் படகுகள், வலைகள் பாதுகாப்பாக வைக்கவும் அதற்கான இடங்களை வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் அனைத்து துறைகளும் குறிப்பாக பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை, விவசாயத்துறை இவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து புயலை எதிர்கொள்வதற்கு 24 மணி நேரமும் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள பொது மக்களை அங்குள்ள மையங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான உணவு தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் மற்றும் பாதுகாப்பற்ற மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

 

puducherry cm narayanasamy press meet nivar cyclone

 

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்துறையானது 12.00 மணி நேரத்துக்குள் மின்சாரம் தர தயாராக வைக்கப்பட்டுள்ளது. நகர மற்றும் கிராம பகுதிகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டால் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.