Skip to main content

"மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு சட்டங்களை நிறைவேற்ற கூடாது"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி! 

Published on 20/09/2020 | Edited on 20/09/2020

 

puducherry cm narayanasamy press meet

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று (19/09/2020) புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் அதிக மருத்துவ பரிசோதனை செய்வதன் காரணமாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரிக்கும், ஜிப்மருக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவது தொடர்பாக 21- ஆம் தேதி ஜிப்மர் நிர்வாகத்துடன் பேச உள்ளோம். 

 

தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் தங்களிடம் காய்ச்சல், இருமல், வயிற்றுபோக்குடன் வருபவர்கள் குறித்த விவரங்களை உடனே சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். அவர்கள் தகவல் தெரிவித்தால் அதன் அடிப்படையில் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய முடியும்.

 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தொற்றின் தாக்கம் தெரியாமல் வெளியே உலவுகின்றனர். இதனால் தொற்று சமூக பரவலாக மாறி மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, மீறினால் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தற்போது மருத்துவத்துறையில் ஏற்படுகிற மாற்றங்களின் அடிப்படையில் மருத்துவமனை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கரோனா தொற்று சம்பந்தமாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கிராமப்புறங்களில் உள்ள மக்களை எக்ஸ்- ரே கருவி மற்றும் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதித்து அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதா? அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா? என்று முடிவு செய்ய வேண்டும். 

 

இதற்காக 15 துணை சுகாதார மையங்களில் எக்ஸ்- ரே கருவி மற்றும் ஆக்ஸி மீட்டர் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தனியார் மருத்துவ கல்லூரிகளும் செய்ய வேண்டும். அதன்மூலம் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வெளியே உலவுவதை தடுக்க முடியும். புதுச்சேரியில் உள்ள 2,463 சாதாரண படுகைகளில் 975 காலியாக உள்ளன. ஆக்ஸிஜன் படுக்கைகள் 958ல் 398 காலியாக உள்ளன. 132 வெண்டிலேட்டரில் 43 காலியாக உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுகைகள் உள்ளன.

 

தனியார் மருத்துவமனைகளிடம் 200 சாதாரண படுக்கைகள், 100 ஆக்ஸிஜன் படுக்கைகளும் கேட்டோம். அதில் 90 சதவீதம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அரசு மருத்துவ கல்லூரியில் அனைத்து படுக்கைகளையும் ஆக்ஸிஜன் படுக்கைகளாக மாற்றும் வேலை நடைபெற்று வருகிறது. அதேபோல், ஜிப்மரிலும் கூடுதலாக ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்.

 

ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சியால் ஓரளவு கரோனா தொற்று கட்டுப்படுத்த முடிகிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தொற்றை கட்டுப்படுத்த முடியாது. எனவே, மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதனை அழைத்து ஆலோசனைகளைக் கேட்க உள்ளோம்.

 

தற்போது செலவு அதிகமாக உள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் முதல்வரின் கோவிட் நிவாரண நிதியை செலவு செய்து வருகிறோம். கரோனா தொற்று பரவல் டிசம்பர் வரை இருக்கும் என்கின்றனர். இதனால் இன்னும் நிதி தேவைப்படுகிறது. தொழிற்சாலை அதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் முதல்வரின் கோவிட் நிவாரண நிதிக்கு தாராளமான நிதி வழங்க வேண்டும்.

 

புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. விவசாயிகளை பாதிக்கும் வகையிலான 3 மசோதாக்களை மக்களவையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது. இதனை விவசாயிகள் முழுமையாக எதிர்த்து வருகின்றனர். 

 

மத்திய அரசு, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் அவர்களது இஷ்டப்படி சட்டத்தை நிறைவேற்றினால், அதனால் விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு மாநிலங்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதனை நாடாளுமன்றத்தில் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

புதுச்சேரியில் நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போது நீட் தேர்வை நடத்தி இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகின்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். இத்தேர்வு வந்தபிறகு தமிழகத்தில் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு மத்திய பா.ஜ.க அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

 

தமிழகம், புதுச்சேரியில் மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதியை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதுசம்பந்தமாக மக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுமட்டும் போதாது. மக்கள் கொதித்தெழ வேண்டும். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். தங்களது உயிரை மாய்த்து கொள்ளக் கூடாது. புதுச்சேரியில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்".இவ்வாறு புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.