Prolonged confusion; Publication in the Gazette regarding the dismissal of the Minister

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவி வகித்து வந்தனர். இவர்கள் 4 பேரில் ஒருவராக காரைக்கால் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துத் துறை, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு அமைச்சராகச் செயல்பட்டு வந்தார்.

Advertisment

இந்த சூழலில் கடந்த 9 ஆம் தேதி திடீரென அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கொடுத்திருந்தார். அந்தக் கடிதத்தில் அவர், “தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் எனப் பொதுவாக கூறுவார்கள். தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது” எனக் குறிப்பிட்டு தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இந்த விஷயத்தில் நான் ஒன்றும் செய்ய முடியாது. சந்திர பிரியங்கா, தான் சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்திருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், அந்த கட்சியில் சாதி ரீதியாக எந்தவித பிரிவினையும் இருந்தது போல் நான் பார்த்தது இல்லை'' என்று தெரிவித்திருந்தார்.

சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாரா அல்லது சந்திர பிரியங்கா தாமாக முன்வந்து ராஜினாமா செய்தாரா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்து வந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. பதவி நீக்கத்திற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவி நீக்கம் முறைப்படி அதிகாரப்பூர்வமாகஅறிவித்துஅரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment