Skip to main content

தாம்பூலத்தில் மது பாட்டில்! அதிரடி காட்டிய கலால் துறை

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Pondicherry wedding liquor issur Excise Department action

 

பொதுவாகத் திருமணம், வரவேற்பு, காதணி விழா, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்லும் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு நிகழ்ச்சி முடிந்து உணவு சாப்பிட்டு விட்டுச் செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தாம்பூலமாக கொடுப்பார்கள். அதன்பிறகு அந்த தாம்பூல பையில் வெற்றிலை பாக்குடன் சாத்துக்குடி, மாம்பழம் போன்ற பழ வகைகளும், லட்டு உள்ளிட்ட இனிப்புகளையும் தாம்பூல பையில் கொடுப்பார்கள்.

 

ஆனால், புதுச்சேரியில் வித்தியாசமாக தாம்பூல பையில் மது பாட்டிலைச் சேர்த்துக் கொடுத்துள்ளனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும், புதுச்சேரி வாணரபேட்டையைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 28 ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் குவார்ட்டர் மது பாட்டிலும் சேர்த்துக் கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை வியப்பில் ஆழ்த்தினர்.

 

Pondicherry wedding liquor issur Excise Department action

 

முதலில் பெண்களுக்கும் குவாட்டர் பாட்டிலுடன் தாம்பூலப் பை வழங்கப்பட்ட நிலையில், சில முணுமுணுப்புகள் மண்டப வளாகத்தில் கிளம்பிய பின்னர் ஆண்களுக்கு மட்டும் மதுவுடன் கூடிய தாம்பூலப் பை விநியோகம் செய்யப்பட்டது. இந்த தாம்பூலப் பைகளை வாங்கிய ஆண்கள் திகைப்பில் மூழ்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மதுவுடன் கூடிய இந்த தாம்பூலப் பையை வழங்கியது உப்பளம் பகுதியைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகர் என்பது தெரியவந்தது. அந்த பிரமுகர் மது பாட்டில்கள் அடங்கிய அட்டைப் பெட்டியை மேசையில் வைத்து அதிலிருந்து மதுபாட்டில் ஒவ்வொன்றாகத் தாம்பூலப் பையில் போட்டுக் கொடுத்த காட்சியைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

Pondicherry wedding liquor issur Excise Department action

 

கலால் சட்டப்படி ஒரு தனி நபர் 4.5 லிட்டர் மதுவும், 9 லிட்டர் பியரும் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் சட்ட விரோதமாகும்.  

 

இதனைத் தொடர்ந்து தனிநபருக்கு அதிக அளவில் மது விநியோகம் செய்யப்பட்ட விதிமுறைகள் தொடர்பாகவும்,  சமூகச் சீரழிவாக அமைந்த இந்த அறுவறுப்பான செயல் குறித்தும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக, பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் புதுச்சேரி காலால் துறைக்கும் வந்த புகார்களை அடுத்து மது பாட்டில்களை தாம்பூலப் பையுடன் கொடுத்த, மணமகளின் உறவினரான ராஜ்குமார் மற்றும் மது விநியோகிப்பதை தடுக்க தவறிய திருமண மண்டப உரிமையாளர், மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் ஆகியோரிடம் கலால் துறையினர் விசாரணை நடத்தினர்.

 

விதிமீறலில் ஈடுபட்டது உறுதியாகவே, மது பாட்டிலுடன் தாம்பூலப் பை விநியோகித்த உப்பளம் தொகுதி அரசியல் பிரமுகர் ராஜ்குமாருக்கு ரூபாய் 25,000, மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்த தண்டபாணி ஒயின்ஸ் உரிமையாளருக்கு ரூபாய் 10,000, திருமணம் நடைபெற்ற திருமண மண்டப உரிமையாளருக்கு ரூபாய் 5,000 என ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதித்து கலால் துறையினர் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.