Skip to main content

“என்னது டிக்கெட்டா? நா செல்ஃபி எடுக்க வந்தவன் சார்...” - டிடிஆரிடம் வசமாக சிக்கிய நபர்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Penalty for taking selfies on Vande Bharat train without ticket

 

நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை இணைக்கும் திட்டத்தில் செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 15ம் தேதியன்று தொடங்கப்பட்டது.

 

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இந்த ரயில், நாட்டின் 8வது வந்தே பாரத் ரயிலாகும். இந்நிலையில், செகந்திராபாத்தில் இருந்து கிளம்பிய ரயில் ராஜமகேந்திரவரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளது. அப்போது அந்த ஸ்டேஷனில் நின்றுகொண்டிருந்த ராமலு ரெட்டி என்ற நபர் வந்தே பாரத் ரயிலை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அடடடடா... இது ட்ரைனா.. இல்ல ஃப்லைட்டா.. இவ்வளவு பளிச்சுனு இருக்கே என வந்தே பாரத் ரயிலை தொட்டு பார்த்து அசைந்துள்ளார்.

 

அதோடு விட்டுவிடாமல் திடீரென ரயிலுக்குள் நுழைந்த ராமலு, சும்மா வளச்சி வளச்சி செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது, ராமலு தான் எடுத்த செல்பிகளை பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த ரயில் கிளம்பியுள்ளது. இதையடுத்து, அவசர அவசரமாக ராமலு கீழே இறங்க முயன்றபோது, வந்தே பாரத் ரயிலில் இருப்பது ஆட்டோமெட்டிக் கதவு என்பதால் அது தானாகவே மூடிக்கொண்டது. இதனால் பதற்றம் அடைந்த ராமலு, ரயிலின் ஒவ்வொரு கதவாக ஓடி ஓடிச் சென்று திறக்க முயன்றுள்ளார்.

 

அப்போது, சரியான நேரத்திற்கு வந்த டிடிஆர், ராமலுவை பார்த்து “இங்க என்ன பண்ணீட்டு இருக்கீங்க, உங்க டிக்கெட் எங்க?” எனக் கேட்டுள்ளார். இதனால், பதற்றமடைந்த ராமலு, “சார் டிக்கெட்டெல்லாம்  இல்ல சார்.  சும்மா ஒரு செல்பி எடுக்க வந்தேன். ஆனா அதுக்குள்ள இந்த கதவு மூடிக்கிச்சி. தயவு செய்து உதவுங்க” எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட டிடிஆர், இது ஆட்டோமெட்டிக் டோர் என்று விவரித்து அறிவுரை கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறியதற்காக 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும், வந்தது வந்துட்டீங்க. ஒரு 190 கிலோமீட்டர் வந்துட்டு போங்க என அடுத்த ஸ்டாப்பான விஜயவாடாவில் இறக்கிவிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

- சிவாஜி

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.