![Penalty for Indigo for Passengers eating on the runway](http://image.nakkheeran.in/cdn/farfuture/wcv1dO6H-85wOh-F1-IlaydjEYEkvSTLJpMqBPNLX1o/1705553976/sites/default/files/inline-images/indigo-ni_0.jpg)
டெல்லியில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று கடந்த 16ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.
இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அன்றைய தினத்திற்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்துக்கும், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி மற்றும் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.