Skip to main content

அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல் - டீசல் மீதான வரி குறைக்கப்படுமா - நிர்மலா சீதாராமன் பதில்!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

nirmala sitharaman

 

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டி வரும் நிலையில், அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து, தற்போது ஒரு பேரல் 96 டாலருக்கு மேல் விற்பனையாகி வருகிறது.

 

இதனால் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் இந்தியாவிலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கச்சா எண்ணெய் விலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வரி குறைப்பது தொடர்பாக முடிவெடுக்கையில் அதை மக்களுக்கு அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

 

கச்சா எண்ணெய் விலை உயர்வை கருத்தில் கொண்டு, எரிபொருளுக்கான வரி குறைக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது; கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது ஒரு கவலைக்குரிய சூழ்நிலை. உக்ரைன் பிரச்சனையில் இராஜதந்திர ரீதியிலான தீர்வு வேண்டும் என நாம் குரல் கொடுத்து வருகிறோம். உக்ரைன் பிரச்சனை கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வரியை குறைப்பது முக்கியமான ஆலோசனைகளில் ஒன்று. கச்சா எண்ணெய் விலை உயர்வின் போக்கு எப்படி செல்கிறது என நாம் பார்க்க வேண்டும்.

 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் தீபாவளிக்கு முன்னதாக எரிபொருளுக்கான வரியை குறைத்தார். உலகளாவிய விநியோகப் பிரச்சினைகளால் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருள் விலையில் என்ன செய்யப்போகின்றன என்பது குறித்து என்னால் பதிலளிக்க முடியாது. எரிபொருள் விலை மீதான கலால் வரி குறைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை வரும்போது, அதுகுறித்து பொதுமக்களுக்கு அறிவிப்போம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.