Skip to main content

முதல்வராக்கினால் வீடு கட்டி தரேன்னு சொன்னீங்க... முன்னாள் முதல்வரின் காரை மறித்த மூதாட்டி!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

கர்நாடகாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு வெள்ளம் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதுவரை மாநிலத்தில் வெள்ள பாதிப்புக்கு கிட்டத்தட்ட 13 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சென்றார்.

அப்போது அவர் சென்ற காரை மறித்து, அவரிடம், தங்குவதற்கு வீடு கேட்டு, மூதாட்டி ஒருவர் சரமாரியாகக் கேள்வி கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. கர்நாடகாவின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஒன்றான பதாமியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர்தான், சித்தராமையாவின் மறித்து இவ்வாறு கேட்டுள்ளார். " உங்களுக்கு ஓட்டு போட்டு முதல்வராக்கினால் வீடு கட்டித் தருவோம்னு சொன்னீங்களே? அதை நம்பித்தானே ஓட்டு போட்டோம். உங்களை முதல்வராக்கினோம். ஆனால் வீடு மட்டும் கட்டித் தரவில்லையே? எங்கே இப்போது எங்களுக்கு வீடு? யார் எங்களுக்கு வீடு கட்டித் தரப் போவது?’ என்று அடுக்காக மூதாட்டிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார். சித்தராமையாவும் அப்பாட்டியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்