Skip to main content

ஒடிசா ரயில் விபத்து; ரயில்வே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Odisha train incident Shocking information released by Railways

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2 ஆம் தேதி சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதே சமயம் இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலும் விசாரணை நடந்தது. அந்த விசாரணை அறிக்கையில், பாகநாகாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனிதத் தவறே முக்கியக் காரணமாகும். மேலும் தவறாக சிக்னல் கொடுத்ததன் விளைவாகத் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில், மூன்று பேரை சிபிஐ கைது செய்தனர்.

 

இந்நிலையில் இந்த ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களில் இன்னும் 29 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனக் கிழக்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிழக்கு ரயில்வே வாரிய அதிகாரி சாகு, “உயிரிழந்தவர்களில் இன்னும் 29 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காணப்படாத 29 பேரின் உடல்களும் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை எங்களிடம் அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். அவ்வாறு தெரிவித்தால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைக்கு உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்