Skip to main content

"மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது" - அரசு கொறடா அனந்தராமன் கோரிக்கை!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

puducherry assembly floor test mlas arrived assembly

 

மொத்தம் 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி சட்டப்பேரவை. இதில் 30 உறுப்பினர்கள் மக்களால் சேர்ந்தெடுக்கப்படுவர். மற்ற மூன்று உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் ஆவர்.  இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வெங்கடேசன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

 

இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு, ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதையடுத்து, காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின்படி, சட்டப்பேரவையில் இன்று (22/02/2021) பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்புக் கூட்டம் நடத்தப்படுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

 

அதன்படி. இன்று காலை 10.00 மணியளவில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் சுயேச்சை, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்களா? இதுகுறித்து சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

puducherry assembly floor test mlas arrived assembly

 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் சட்டப்பேரவை அரசு கொறடாவுமான ஆர்.கே.ஆர். அனந்தராமன் கூறும்போது, "நியமன எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. குறிப்பாக என்னை எதிர்த்து போட்டியிட்டு 147 வாக்குகளே வாங்கி தோல்வியடைந்த தங்க.விக்ரமன் நியமன எம்.எல்.ஏவாக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் வாக்களிக்களிப்பதும், மக்களால் நிராகரிக்கப்பட்டவரும் வாக்களிப்பதும் மக்களாட்சிக்கு எதிரானது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. எனவே, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் வலியுறுத்துவோம். நாங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறோம். எதிரணியில் குறைவாக இருக்கிறார்கள். நாங்கள் வெற்றிபெறுவோம்" என்றார்.

 

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, "நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கலாம் என உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழக்கும். எனவே நாராயணசாமி பெரும்பான்மை இழப்பதற்கு முன்னதாகவே தமது பதவியை ராஜினாமா செய்வது நல்லது"  என்றார்.

 

பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் அரசு தப்பிக்குமா? கவிழுமா? என புதுச்சேரி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.